ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்
ஹட்டன் - சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை பொலிஸார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(06.04.2026) இடம்பெற்றுள்ளது.
மலையில் உச்சிக்கு சென்ற இளம்பெண்
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த 20 வயதான மாணவியான லூனா துகாட், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிற மாணவர்களுடன் இலங்கைக்கு வருகைந்தந்து ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.
அவர், கடந்த (05.04.2026) ஹட்டனின் பொன்னகர் வீதியில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் தனது சில நண்பர்களுடன் தங்கியிருந்து, சிங்கமலை சிகரத்தை நோக்கி ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று(06) காலையில் சிங்கமலை சிகரத்தைப் பார்க்கச் செல்வதாகக் கூறி சென்ற யுவதி, திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய மலை உச்சிக்குச் சென்றிருந்த போது அவரால் கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மீட்பு நடவடிக்கை
அதன் பின்னர், இது குறித்து ஹட்டனில் உள்ள அரசு சாரா நிறுவன அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரைப் பொறுப்பேற்றிருந்த ஹட்டன் பகுதி அதிகாரி ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் ஹட்டன் தலைமையகத்தின் பிரதம ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், ஹட்டன் பொலிஸ்ஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர், சிங்கமலை வனப்பகுதி வழியாக மலை உச்சிக்குச் சென்று யுவதி அமர்ந்திருந்த இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

மலை உச்சியில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை பாதுகாப்பாக மீட்டு, பொலிஸார் கொண்டு சென்ற உணவுகளையும் கொடுத்து பாதுகாப்பாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், காட்டுப் பகுதியிலிருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக ஹட்டன் பொலிஸாருக்கு குறித்த யுவதி நன்றி தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO