மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட தாழ் நிலங்களில் வெள்ளம்
கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மேட்டுநில விவசாயத்தில் ஈடுபட்டுள்ள களுதாவளை, தேத்தாதீவு, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல கிராமங்களிலும் வெள்ளநிலமை ஏற்பட்டுள்ளதோடு, பல வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதனால் மக்களின் உள்ளுர் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச சொந்தமான, இக்கிராமங்களில் அமைந்துள்ள வீதிகளை இதுவரையில் முறையாக செப்பனிடாமையும், முறையான வடிகானமைப்பு வசதிகள் அமைக்காமை, நீர் வழிந்தோடும், தோணாக்களை சிலர் அடைத்து வைத்துள்ளமை, போன்ற பல காரணங்களிளால் இவ்வாறு மழை வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
இவ்வாறு மழை நீர் தேங்கி நிற்பதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும், சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் அங்கலாய்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க வெற்றிலை, மிளகாய், கத்தரி, பயற்றை, வெங்காயம், உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிற் செய்கைக்குப் பெயர்போன களுதாவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேட்டுநிலப் பயிரினங்களும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மழைநீர் தேங்கி நிற்பதனால் தமது பயிர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் நீரை வெட்டி விடுவதற்கும், இனிமேலாவது வீதிகளைப் புனரமைப்புச் செய்து முறையான வடிகானமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




