கட்டுநாயக்கவுக்கு வந்த பல விமானங்கள் அவசரமாக திருப்பி அனுப்பி வைப்பு..
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பல விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழையுடனான வானிலைக்கு மத்தியில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த சுமார் 6 விமானங்கள் இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வருகை தந்த 9 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்களும், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்களும், அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட் நிறுவனத்தின் ஒரு விமானமும் மற்றும் குவைத்திலிருந்து வந்த ஜசீரா நிறுவனத்தின் ஒரு விமானமும் என மொத்தம் 06 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும், டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமும், இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானமும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியாவின் புதுடில்லியிலிருந்து வந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானமும் மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.