ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது!
தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக எழுச்சியுறும் என ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாரந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்விலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல்
அதன் முழு விபரமும் வருமாறு,
தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எழுச்சியுறும் என ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் விஜய் ஆட்சியமைப்பது தொடர்பான பரபரப்பு முடிவிற்கு வந்துள்ளது. ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஓடித்திரிந்த விஜய்க்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து வந்த வேலுமணி, சண்முகம் குழுவினர் ஆதரவு கொடுத்தமையே இதற்கு காரணமாகும். இந்த ஆதரவு நீடிக்குமா? என்பதை தற்போதைக்கு உறுதியாக கூறிவிட முடியாது. பரஸ்பர நலன்கள் உறுதியை தீர்மானிக்கும்.

எது எப்படியிருந்தபோதும் தற்போது விஜயின் ஆட்சி நன்றாக நடைபெறுகிறது. அந்த ஆட்சியை கையாள்வது தொடர்பாக ஈழத்தமிழர்கள் யோசிப்பதே புத்திசாலித்தனமானது. அங்கேயுள்ள கட்சி அரசியலுக்குள் நாம் மாட்டுப்படக்கூடாது. எமது தனிப்பட்ட விருப்பங்கள் எதுவாக இருந்தபோதும் ஈழத்தமிழர்கள் என்ற வகையில் பொது ஆதரவினைப் பெறுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும், இடையேயான தொடர்பு மிகவும் தொன்மையானது. அது சமயம், இலக்கியம், அரசியல், பொருளாதாரம், எனப் பன்முகத்தன்மை வாய்ந்தது. தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலுக்கு யாழ்ப்பாணத்திலும் சொத்துக்கள் இருக்கின்றன.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கை
முன்னோர்கள் இந்தத் தொடர்பை தொப்புள் கொடி உறவென்பர். தமிழ்க்கடல் எனக் கூறப்படுகின்ற பாக்கு நீரிணையே தமிழ்த் தாயகத்தையும் தமிழ் நாட்டையும் பிரித்து வைத்திருக்கின்றது. தாயகத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதுகாப்பு மதில் தமிழ்நாடு தான். அது பெரும் சேமிப்புச் சக்தியாக உள்ளது.
இலங்கைத்தீவு மிகக் குறைந்த கடல் மைல் தூரத்தில் இருப்பதால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எல்லைக்குள் இருக்கின்றது. இதனால் பிரித்தானியா இந்தியா காலத்திலிருந்து இலங்கையையும் இணைந்ததாகவே இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடுவது என்பது இயல்பானது.தவிர்க்க முடியாதது.

இந்தத் தலையீட்டு விவகாரத்தில் ஈழத் தமிழர்களின் நலன் வேணும் ஆற்றலும் தமிழ்நாட்டிற்கு தான் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவு முழுவதும் அதற்கு தேவை. அது தமிழ் மக்களின் விவகாரங்களை இரண்டாம் பட்ச நிலையிலேயே வைத்திருக்கும்.
சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற ஒரு கருவி என்ற நிலையிலேயே வைத்திருக்கும். உள்நாட்டில் இருந்து அழுத்தங்கள் வராமல் இந்தியா ஈழத் தமிழர் நலன் சார்ந்து செயற்படாது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டிற்கே அதிகம் உண்டு.
ஈழத்தமிழர்களின் சர்வதேச வழிப்பாதையும், தாயகம், சென்னை புதுடில்லி, உலகம் என்பதாகவே இருக்க வேண்டும். எனவே ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச வழிப்பாதையின் திறவுகோலும் சென்னை தான். இந்த யதார்த்த நிலையின் படி தமிழ்த் தேசியச் செயற்பாட்டின் எல்லைக்குள் தான் தமிழ் நாடு இருக்கின்றது. எனவே தமிழ்த் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப் படல் வேண்டும்.
புவிசார் அரசியலமைப்பு
இவ்வாறு முன்னெடுக்கும் போது கையாளல் விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்வது அவசியமானதாகும். இதற்காக வலுவான மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும், வகுத்து செயல்பட வேண்டும். இந்திய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், தமிழ்நாட்டின் அழுத்தம் கொடுக்கும் பலம் மிகவும் அதிகமானது. இதற்குப் பல காரணங்கள் உண்டு அதில் முதலாவது தமிழ்நாட்டின் புவியியல் அமைவிடமாகும்.
தூர கிழக்கிற்கான போக்குவரத்து பாதையில் முக்கியமான இடத்தில் தமிழ்நாடு உள்ளது. புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கும் கேந்திரப் பிரதேசத்தில் தான் இருக்கின்றது. ஆனாலும் தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் தமிழர் தாயகத்தின் கேந்திர ஆற்றலை விட உயர்வானது. ஏனெனில் அதற்குப் பின்னால் பெரிய நிலத் தொடர்ச்சி இருக்கின்றது.

இரண்டு கேந்திரப் பலங்களும் இணைகின்ற போது அதன் பலம் மிகவும் உச்சமானது. புவிசார் அரசியலில் அக்கறை கொண்ட தரப்புக்களுடன் பேரம் பேசுவதற்கு இந்த கேந்திர பலம் பெரிதும் உதவியாக இருக்கும். இரண்டாவது தமிழ்நாட்டின் சனத்தொகையாகும். சுமார் 7 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர்.
இது இலங்கையின் சனத்தொகையை விட பல மடங்கு அதிகமானது. தமிழ்நாட்டை விட ஆந்திரா, கேரளம், கர்நாடகம், மும்பாய், புதுடில்லி போன்ற மாநிலங்களிலும் தமிழக வம்சாவழித் தமிழர்கள் வாழ்கின்றனர். இதனையும் சேர்த்தால் இந்தியா முழுவதிலும் 8 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர் எனலாம்.
தமிழக வம்சாவழித் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரவலாக வாழ்கின்றனர். காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இவர்கள் பிரித்தானிய அரசினால் அந்த நாடுகளில் குடியேற்றப்பட்டனர். தற்போது இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பில் உயர் பதவிகளிலும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், போன்ற நாடுகளில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையில் தமிழர்களே உள்ளனர். இதை விட மொரீசியஸ், பிஜித்தீவுகள் போன்ற நாடுகளிலும் கணிசமான தமிழர்கள் வசிக்கின்றனர். ஆயுதப் போராட்ட காலத்தில் தென்னாபிரிக்கா, மலேசியா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மொரிசியஸ்சிலும் கட்டப்பட்டுள்ளது. வல்லரசுகளுக்கு சந்தைகள் முக்கியம். அதிக சனத்தொகை கொண்ட மக்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்பதை அறிந்தால் அவை எதிர்ப்பு நிலை எடுப்பதில் தயக்கம் காட்டும். இது ஈழத் தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை அதிகரிக்கும்.

உண்மையில் ஈழத் தமிழர்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருப்பதால் அக ஆற்றல் மட்டும் போதாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டை அடிப்படையாகக் கொண்ட உலகத் தமிழர்கள் புற ஆற்றலை வளர்க்கக்கூடிய சக்திகளாக இருப்பர். இதன்படி பார்க்கும்போது உலகத் தமிழர்களை இணைக்கும் மையமாகவும் தமிழ்நாடே இருக்கப் போகின்றது.
முன்பு உலகத் தமிழராட்சி மன்றம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் போன்றவை உலகத் தமிழர்களை மொழி, பண்பாடு சார்பாக இணைக்கும் மையங்களாக செயல்பட்டன. தற்போது அவை செயற்படுகின்ற போதும் வினைத்திறன் குறைவாக உள்ளது எனலாம். அவற்றை மேலும் வளர்த்தெடுப்பது பற்றியும் கவனங்களைக் குவிக்க வேண்டும் இந்தப் பணியில் தமிழ்நாடு ஒரு “மாநில அரசு” என்று அந்தஸ்தில் இருப்பதால் அதிகம் உதவக்கூடியதாக இருக்கும்.
மூன்றாவது தமிழ்நாடு வரலாற்று ரீதியாக மைய நீரோட்ட அரசியலுக்கு வெளியில் நிற்கின்றமையாகும். திராவிட கருத்து நிலை கொண்ட அரசியலே இதற்கு பிரதான காரணமாகும். பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட சிந்தனைகளும், திராவிட அரசியலும் தோற்றம் பெற்றது.
தமிழக வெற்றிக்கழகம்
ஒரு சில கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் “திராவிட” என்ற பதத்தினை தம்மோடு இணைத்துக் கொண்ட கட்சிகளே! விஜய்யினுடைய தமிழக வெற்றிக்கழகமும் பெரியாரை தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் அடையாளம், சமூக நீதி என்பவற்றை கட்சியின் கொள்கைகளாக அடையாளப் படுத்தியுள்ளது.
மைய நீரோட்ட கட்சிகள் பாரிய முயற்சிகளை எடுத்த போதும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதுவும் “இந்துத்துவா” கொள்கைகளுக்கு சிறிய இடத்தைக் கூட தமிழ்நாடு வழங்கவில்லை. பாரதீய ஜனதாக்கட்சி ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றிருக்கின்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் போட்டியிட்ட படியால் ஒரு ஆசனம் கிடைத்தது. தனித்துப் போட்டியிட்டால் அதுவும் கிடைத்திருக்காது. இவ்வாறு மைய நீரோட்ட அரசியலிருந்து விலகி நிற்பது ஈழத்தமிழர் போராட்டத்திற்கு சார்பானதாகும்.
தமிழ்நாட்டில் தற்போது ஈழத்தமிழர் விவகாரம் பொது விவகாரமாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கொள்கைத் திட்டத்தில் உள்ள தமிழர் விவகாரத்தையும் இணைத்துள்ளன. மைய நீரோட்ட கட்சிகளும் இதற்கு விதிவிலக்காக இல்லை. அடுத்தது தமிழ்நாட்டின் படித்த மத்திய தர வர்க்கம் ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை கொள்ளத் தொடங்கியுள்ளது.
இதற்குள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்பவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என்போர் அடங்குகின்றனர். இந்தத் தரப்புகள் உலகத் தமிழர் விடுதலையோடு இணைத்து ஈழத்தமிழர் விவகாரத்தைப் பார்க்கின்றன. இவற்றையும் கவனத்தில் எடுக்கும் போது தமிழ்நாடு முக்கிய மதிலாக இருப்பதை அவதானிக்கலாம்.
தமிழ்நாட்டு அரசின் ஆதரவு
இந்த உண்மைகளை புரிந்து கொண்டு தமிழ்நாடு தொடர்பான மூலோபாயங்கள், தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும். பணிகள் என வரும் போது முதலில் மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாட்டில் ஒரு தொடர்பு அலுவலகத்தை உருவாக்குவதாகும். தமிழ்நாட்டு ஆதரவாளர்களைக் கொண்டே இதனை உருவாக்கலாம். இந்த அலுவலகம் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கலாம்.
தமிழ்நாடு அரசின் ஆதரவினையும் இதற்கு பெறுவது உகந்ததாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு வெளியே ஏனைய மாநிலங்களிலும், மத்திய அரசு மட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் இந்த அலுவலகம் ஒருங்கிணைப்பது ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த அலுவலகத்தினூடாக தமிழ் நாட்டில் செயற்படும் மாநிலக்கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் அணுகலாம்.

தகவல் பரிமாற்றங்களை இதனூடு மேற்கொள்ளலாம். தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் உடனடியாக தமிழ்நாடு மாநில, மத்திய அரசாங்கங்களின் கவனத்திற்கும், ஊடகங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வது அவசியம்.
கட்சிகளை அணுகும் போது முன்னர் கூறியது போல கட்சி முரண்பாடுகளுக்குள் மாட்டுப்படாமல் இருப்பது மிகவும் முக்கியம். பொது ஆதரவினை மட்டும் கோர வேண்டும். அதே வேளை தமிழ்நாட்டின் பொது விவகாரங்களுக்கு ஈழத் தமிழர்களாக ஆதரவினை வழங்க வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்வதை நிறுத்துவது நல்லது.
கடந்த காலங்களைக் கிளறுவது எந்தப் பயன்களையும் தரமாட்டாது. குறிப்பாக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தையும், பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஈழத் தமிழர்கள் அவற்றை தவிர்க்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு
முன்னர் கருணாநிதி உருவாக்கிய ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு (teso) மீளவும் உருவாக்கப்படுவதற்கு ஊக்கம் கொடுக்கலாம். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புக்கள் இதன் உருவாக்கத்திற்கு முன் வருவர். ஏற்கனவே சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு ஈழத் தமிழர் விவகாரத்தைப் பற்றிப் பேசி உள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் சட்டசபைத் தீர்மானமெடுத்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி விஜய் அரசினை வேண்டலாம். இந்த விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகளையும் நினைவுபடுத்தலாம்.

தமிழ்நாட்டு கட்சிகள் மூலம் இந்த வேண்டுதலை விடுவித்தால் விஜய் அரசு இதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை. அடுத்தது ஈழத் தமிழர்கள் இன்று பச்சை ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இங்கு இந்த விடயத்தில் ஒரு பச்சை சூறையாடல் இடம் பெறுகின்றது. நல்லிணக்கம் பற்றி வாய் விரியப் பேசுகின்ற அனுர அரசாங்கமும் இதற்கு விதிவிலக்காக இல்லை.
நிலப்பறிப்பு, மொழிப் புறக்கணிப்பு, பொருளாதார அழிப்பு, கலாச்சார சிதைப்பு போன்ற இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. அரச திணைக்களங்கள், படைகள், மத நிறுவனங்கள் என்பன இந்த ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய தனியான தேசமாக இருப்பதை அழிப்பதே இந்த ஆக்கிரமிப்பின் நோக்கமாகும்.
இந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழ்நாடு அரசாங்கம் மத்திய அரசாங்கத்தினூடாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தக் கோரிக்கையை விஜய் அரசிடம் முன்வைக்க வேண்டும்.
அபிவிருத்தி திட்டங்கள்
பொருளாதார ரீதியாகவும் மாநில அரசாங்கத்திற்கு பல பணிகள் காத்திருக்கின்றன. அதில் முதலாவது தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதாகும். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறைமுக அபிவிருத்தி, தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம் அமைத்தல் என்பன இதில் முக்கியமானவையாகும்.
மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இவற்றை துரிதப்படுத்தலாம். இந்த அபிவிருத்திகள் இந்திய புவிசார் நலன்களுக்கும் அவசியமானவையாகும். அடுத்தது தமிழக முதலீட்டாளர்கள் வடக்கு - கிழக்கில் முதலிடுவதை ஊக்குவிப்பதாகும். இதற்கு முதற்படியாக தமிழக முதலீட்டாளர்கள் வடக்கு - கிழக்கிற்கு விஜயம் செய்து முதலீட்டிற்கான ஆய்வுகளை மேற்கொள்வது நல்லது.

வடக்கு - கிழக்கில் வளமாக இருக்கின்ற மூலப் பொருட்களை பயன்படுத்தி முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குவது ஆரோக்கியமானது. இதைவிட கலாச்சாரப் பணிகளும் முக்கியமானது. இதில் மிகவும் அவசியமானது தமிழ்நாடு சிவில் சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்புவதாகும்.
ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருடனும் உறவுகளைக் கட்டியெழுப்ப தமிழ்நாடு அரசு உதவ வேண்டும். கலை, பண்பாட்டு பரிமாற்றங்களுக்கும் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். அதேவேளை இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி, தொழிற்கல்வி, ஊடகக் கல்வி என்பவற்றிற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு எழுச்சி
அத்துடன் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு குறுகிய கால தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கும் உதவ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை தமிழக முதலமைச்சர்கள் எவரும் தமிழர் தாயகத்திற்கு வருகை தரவில்லை. இந்தக் குறைபாட்டை தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய் நிவர்த்தி செய்ய வேண்டும்.
எவ்வளவு விரைவாக விஜய் விஜயம் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக விஜயம் செய்வது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுப்பதாக அமையும். இந்தக் கோரிக்கைகள் விஜய் அரசாங்கத்தை மட்டும் இலக்காகக் கொண்டவையல்ல.

தமிழ்நாட்டின் முழு அரசியல் சமூகத்தையும் இலக்காகக் கொண்டவை. எனவே பிரதான எதிர்க்கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வர வேண்டும்.
எல்லாவற்றிற்கும் முக்கிய நிபந்தனை தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியலைக் கட்டியெழுப்புவதே! தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது விவகாரங்களிலாவது ஒருங்கிணைவைக் காட்ட தயங்கக் கூடாது. தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எழுச்சியுறும் என ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. இது அரசியல் அறமும் அல்ல.