மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கடற்தொழிலாளர்கள் போராட்டம் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமது பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கடற்பகுதியில் சிலர் முன்னெடுக்கும் டைனமோ வெடிக்க வைத்து மீன்பிடிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டைனமோ வெடிக்க வைத்து மீன்பிடி
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவி ஊடாக இயந்திரப்படகில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் அலுவலகத்திற்கு வந்த கடற்தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வரும் சில கடற்தொழிலாளர்கள் மீன் உற்பத்தி செய்யும் கற்பாறை பகுதியில் டைனமோவை வெடிக்க வைத்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பகுதியில் மீன்பிடி குறைந்து வருவதாகவும் கடற்தொழிலாளர்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டைனமோ வெடிக்க வைப்பதனால் கடல் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலையில் இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடித் திணைக்கள அதிகாரி
டைனமோ வைத்து மீன்களை பெருமளவில் பிடித்துச் செல்வதனால் தொழிலுக்கு செல்லும் ஏனைய கடற்தொழிலாளர்கள் மீன் இல்லாமல் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும், இதனால் குடும்பங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மகஜரொன்று மீன்பிடித் திணைக்கள அதிகாரி அமிர்தலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த மீன்பிடித்திணைக்கள அதிகாரி, குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பிலான விபரங்களை கடற்தொழிலாளர்கள் தருமிடத்து உடனடியாக நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
