மன்னார் பேசாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய கடற்தொழிலாளரின் சடலம்(Photos)
மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(23.01.2023) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்தொழிலாளர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தரான 26 வயதுடைய கஸ்டார் அலெக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதியைச் சேர்ந்த கஸ்டார் அலெக்ஸ் (வயது- 26) , இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் பேசாலையில் குடும்பத்துடன் தங்கி இருந்து கடந்த சில மாதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
மீன்பிடி தொழில்
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி குறித்த கடற்தொழிலாளர் பேசாலை கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் படகு மூலம் (ரோலர்) கடலுக்குள் மாலை 3 மணியளவில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
இவருடன் மேலும் இரண்டு கடற்தொழிலாளர் சென்றுள்ளனர். அவர்கள் கடலுக்குள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவர்களது தொழிலை மேற்கொள்ளும் படகின் பிரதான வலை கிழிந்துள்ளது.
இந்நிலையில் அதை சீர் செய்து மீண்டும் தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட தொழிலில் மீன்பாடு இல்லாத நிலையில் இரவு சுமார் 9.30 மணி அளவில் பேசாலை கரைக்கு திரும்பி கடற்கரைக்கு சற்று தொலைவில் படகை நங்கூரமிட்டு குறித்த 3 நபர்கள் நீந்தி கரைக்கு வந்து உள்ளனர்.
இதன்போது ஒருவர் தாமதமாகியும் கரைக்கு வராத நிலையில் காணாமல் போய் உள்ளார்.
குறித்த நேரத்தில் அவரை தேடிய மற்றைய இரண்டு கடற்தொழிலாளர்களும் உரிமையாளரிடம் முறையிட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
கரையொதுங்கிய சடலம்
இந்த நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளரின் சடலம் இன்று திங்கட்கிழமை (23) காலை பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவருடன் தொழிலுக்கு சென்ற இரண்டு நபர்கள் மற்றும் அவரது மனைவி, உறவினர், தொழில் உரிமையாளர் ஆகியோரிடம் பேசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.