செட்டிகுளத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு தடாகம் பிரதி அமைச்சரால் கையளிப்பு
வவுனியா, செட்டிகுளத்தில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மீன் குஞ்சு வளர்ப்பு தடாகம் கப்பாச்சி கடற்றொழில் சங்கத்திடம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் நேற்று (19) கையளிக்கப்பட்டது.
நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் கடற்றொழில் என்பவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நன்னீர் மீன் வளர்ப்பு தடாகங்களை உருவாக்கி மீன் குஞ்சுகளை விடுவதற்கு வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், கப்பாச்சி மீனவ சங்கத்திற்கு 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
குறித்த நிதியில் அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு தடாகம் மீனவ சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டதுடன், 2 இலட்சம் மீன் குடம்பிகளை மீன் விரலிகளாக மாற்றி குளத்தில் விடும் வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளா தவமலர் மனோகரராஜா, கடற்றொழிலாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






