வடக்கில் தொழில் தேடுபவர்கள் மற்றும் வழங்குநர்களை டிஜிட்டல் தளத்தில் உள்வாங்கவும்: ஆளுநர் ஜீவன் தியாகராஜா
வடமாகாணத்தில் தொழில் தேடுபவர்கள் மற்றும் தொழில் வழங்கக் காத்திருப்போர் தொடர்பிலான தகவல்களை டிஜிட்டல் தளம் ஒன்றில் பதிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் உப அலுவலகத்தில் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான மாவட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடமாகாணத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சினையை எதிர்கொள்வதற்குத் தொழில் வழங்குநர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கும் ஆளுநருக்கும் இடையில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகையில்,
வடக்கில் தொழில் வாய்ப்புகளைத் தேடிக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்களை டிஜிட்டல் மயப்படுத்துவதோடு தொழில் வழங்குநர்களையும் இணைத்து தரவுத் தளம் ஒன்றை உருவாக்குங்கள்.
இவ்வாறான நடைமுறைகளை மாவட்ட ரீதியாகக் கடமையில் உள்ள உத்தியோகத்தர்கள் நடைமுறைப் படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பாடசாலைகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தேசிய கைத் தொழில் பயிலுனர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற பயிற்சி நெறிகளைக் குறித்த பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்துங்கள்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை தேடிச்செல்லும் இளைஞர்களுக்கு உள்நாட்டிலேயே அவர்களின் துறை சார்ந்த துறைகளில் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
மேலும் சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்பவர்களுக்குத் தேவையான சந்தை வாய்ப்புகளை உள்நாட்டில் உருவாக்கிக் கொடுத்தல் அவர்களின் உற்பத்திகளுக்குத் தேவையான மூலப் பொருட்களைத் தடையின்றி பெற்றுக்கொடுக்கவும் என்றார்.
இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடி இருந்தார்.
மேலும் குறித்த கலந்துரையாடலில் மாவட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் தேசிய
பயிலுநர் அதிகாரசபை போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
