கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலையில்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதற்கான வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் கிழக்கு ஆளுநர் கூறியுள்ளார்.
கோரிக்கையடங்கிய மனு
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று (13) ஆளுநருக்கும் மக்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மனு ஒன்றை கையளித்தனர்.
இந்தநிலையில், ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் ,விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம்.
எனவே கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கோரிக்கையடங்கிய மனுவை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு
இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில் ஆளுநரிடம் பட்டதாரிகளின் கோரிக்கையடங்கிய மனுவை வழங்கியுள்ளோம்.
இதன்போது, கிழக்கில் 3 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
