கட்டுநாயக்கவில் இருந்து யாழ் சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிலைமை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாடகை வாகனத்தில் சென்ற குடும்பம் ஒன்றின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பயணப்பொதிகளுடன் வாகனத்தின் சாரதி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலில் மதிய உணவு சாப்பிட்ட போது நடந்த சம்பவம்

இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். கனடாவில் இருந்து வந்த சிலர் யாழ்ப்பாணம் சென்றுக்கொண்டிருந்த போது, குருணாகல் பிரதேசத்தில் ஓரிடத்தில் மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது வாடகை வாகனத்தின் சாரதி தமது பயணப்பொதிகளுடன் காணாமல் போனதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் செல்வாற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வாடகைக்கு அமர்த்தவில்லை என்பதால், வாகனம் சம்பந்தமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான 9 பொதிகளுடன் மாயமான சாரதி

மதிய உணவு சாப்பிட வருமாறு சாரதியை அழைத்த போதிலும் அவர் மறுப்பு தெரிவித்து வாகனத்திலேயே இருந்துள்ளார்.
குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது, தமது கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 9 பொதிகளுடன் சாரதி காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது சம்பந்தமான பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, அவர்கள் வேறு ஒரு வாடகை வாகனத்தில் யாழ்ப்பாணம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.