பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கவே 22ஆவது திருத்தம்! கம்மன்பில குற்றச்சாட்டு
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கும் உள்நோக்கத்துடன், ஒட்டுமொத்த நீதியரசர்களின் பதவிக்காலத்தையும் நீடிக்கும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் நேற்று(27.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு
மேலும் தெரிவிக்கையில், "பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவரது சேவைக்காலத்தை நீடிக்க முயன்ற அரசு, எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட சகல நீதிபதிகளின் பதவிக்காலத்தையும் நீடிக்க உத்தேசித்துள்ளது.

இதன் ஊடாக பிரதம நீதியரசர் என்ற தனிநபரை இலக்காகக் கொண்டே இந்த 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
அரசிடம் குறுகிய நோக்கங்கள் இல்லாவிடின், பிரதம நீதியரசர் ஓய்வுபெற்றதன் பின்னர் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.
இந்தத் திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் பயனாளிகளாக மாறுவதால், இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது.
எனவே, இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு ஜனாதிபதி உடனடியாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போது மக்களே இதற்குச் சிறந்ததொரு தீர்ப்பை வழங்குவார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை