பாதுகாப்பற்ற நிலையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்!
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் இன்னும் பாதுகாப்பற்றதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் முன் பகுதி தொடர்ந்தும் மிதந்து கொண்டிருக்கிறது என்று கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் முற்றிலும் நிலையானதாக இருக்கும் வரை எதிர்கால நடவடிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கப்பலின் உரிமையாளர்களின் செய்தித் தொடர்பாளர் எண்ட்ரூ லீஹி, தாம் இன்னும் நிலைமையைக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கப்பலின் எச்சங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கேட்ட கேள்விக்கு பதில் வழங்கியுள்ள அவர்,
கப்பல் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் ஒரு மமுடிவு எட்டப்படவில்லை.கப்பல் உரிமையாளர்கள், ஏற்கனவே கடந்த பல நாட்களாகவே செய்து வருவதைப் போலவே காத்திருந்து பார்க்க மட்டுமே முடியும்.
இலங்கையின் இடைக்கால நட்டஈடு உரிமைகோரல் குறித்து கருத்துரைத்த , எண்ட்ரூ லீஹி, நிறுவனத்தின் சட்டத்தரணிகள், காப்பீட்டாளர்களிடம் இது தொடர்பில் தொடர்பு கொண்டிருப்பதால், தம்மிடம் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார்.
மே 20 முதல் ஜூன் 1 வரை இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இலங்கை, கப்பல் உரிமையாளர்களிடமிருந்து 40 மில்லியன் டொலர் இடைக்கால கோரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை மாலை நிலவரப்படி, இலங்கை கடற்படை
மற்றும் இந்திய கடலோர காவல்படையினரும் சம்பவ இடத்தில் அவதானித்ததில் கப்பலில்
இருந்து எரிபொருள் கசிவுக்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று கப்பல்
உரிமை நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது.