யாழ். பல்கலையில் "சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி" கண்காட்சி (Video)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் "சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி" எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கண்காட்சி நேற்று (23.08.2023) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது.
தோட்டத்தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதை நினைவுகூர்ந்து கண்காட்சி
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், நுண்கலைத்துறை தலைவர் பேராசிரியர் தா.சனாதனன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றதுடன் விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் ரி.எம்.கிருஷ்ணா, பிரபல தழிழக எழுத்தாளர் பெருமாள் முருகன், வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் காலச்சுவடு வெளியீட்டக உரிமையாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தென்னிந்தியாவில் இருந்து மலையகத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











