அனைவருக்கும் ஒரே சட்டம் வேண்டும்! கோரிக்கை விடுக்கும் சுருக்குவலை தொழிலாளர்கள்
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் விசாரணை குழு நேற்று (06.10.2022) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு இரு மீனவ குழுக்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளது.
இதன்போது தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நீதி வேண்டும்
“கொழும்பில் இருந்து வருகைதந்த அதிகாரிகள் குழு விசாரணையினை மேற்கொண்டுள்ளது இந்த மாவட்டத்தில் எமக்கு ஏற்படும் அநீதிகள், ஒரு மாவட்டத்தின் சம்மேளனம் எங்களை ஒதுக்கி தவறான விதத்தில் சில வேலைகளை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் எமக்கு நீதி வேண்டும். இந்த மாவட்டத்திற்கு நல்ல நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். எமது கடற்தொழில் இப்போது மாற்றம் அடைந்துள்ளது.
நாங்கள் இன்னும் சூடைவலை அறக்கொட்டியான்வலை என்று தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. அதனால் தற்காலிக சூழலுக்கு ஏற்றமாதிரி சுருக்குவலைக்குரிய அனுமதிகள் இன்னும் தேவை என்பதை கோரியுள்ளோம்.
சட்டவிரோத தொழில்
சட்டவிரோத தொழில் செய்கின்றோம் என்று எங்களுக்கு பெயர் வைத்துள்ளார்கள். நிச்சயமாக இல்லை. சட்டவிரோத தொழில் அவர்களின் கண்ணுக்கு முன்னால் அவர்களுடன் கூட இருப்பவர்களும் செய்கின்றார்கள். அதனை வெளிக்கொண்டுவருகின்றார்கள் இல்லை.
இன்று நான்கு கிலோ மீட்டருக்குள் கரைவலையினை போட்டு இரண்டு உழவு இயந்திரத்தினை கொண்டு இழுக்கின்றார்கள் இதுவும் சட்டவிரோதம் தான். ஆனால் இதனை முல்லைத்தீவு சம்மேளனம் முன்வைத்தில்லை, சுட்டிக்காட்டவில்லை.
ஆகவே முல்லைத்தீவில் இருக்கும் எமக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றியமைத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரோ நியாயம் கிடைக்கவேண்டும். ஒரோ சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றுதான் விசாரணைக்குழுவில் முன்வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.