நீங்கள் புறம்தள்ளிவிட்டு செல்ல முடியாது! பங்காளி கட்சிகளுக்கு நாமல் அறிவுரை
அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இருப்பதாகவும் அவர்கள் அந்த பொறுப்பை புறந்தள்ளி விட்டு செல்ல முடியாது எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கூட்டணியின் சில தரப்பினர் தனித்தனியாக கூட்டங்களை நடத்துகின்றனர். அதில் பிரச்சினையில்லை. அது அவர்களின் தேவை. காரணம் அவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்.
எனினும் இவர்கள் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் தமக்கு பொறுப்பில்லை என காட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது.
கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மீது மாத்திரம் அந்த பொறுப்பை சுமத்த முடியாது. அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்து கொண்டு தமக்கு சம்பந்தமில்லை எனக் கூற முடியாது. கூட்டு பொறுப்பு இருக்கின்றது.
இதனால், தனித்தனியாக கூட்டங்களை நடத்தினாலும் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி நிர்மாணிப்பிலும் அவர்களுக்கு பங்குள்ளது. அதேபோல் விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்கும் போது அதில் பொறுப்புள்ளது.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை ஏற்படுத்துவதிலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது. சேதனப் பசளை தொடர்பிலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது. இதனால், அவர்கள் தமது பொறுப்பில் இருந்து விலகிச் செல்ல முடியாது என்பதை நினைவூட்ட வேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, அரசாங்கத்தின் முடிவுகளை விமர்சித்து வருகின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனித்து இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri