பிரதமர் ஹரிணி ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்வைத்த கோரிக்கை
இலங்கை எதிர்கொண்ட 'டித்வா' சூறாவளி தாக்கத்தில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவியை பாராட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை (10.02.2026) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு
இச்சந்திப்பின் போதே பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வளர்ச்சி மற்றும் பொருளாதார பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கை எடுத்துரைத்தார். இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சந்திப்பு மையமாகக் கொண்டிருந்தது.

மேலும் பொருளாதார நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கு தேவையான சட்டமன்ற மற்றும் கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.