மன்னார் நகர சபை முதல்வர் தெரிவு
மன்னார் நகர சபை முதல்வராக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் டேனியல் வசந்தனும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகமது உசைனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று(24) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
இங்கு, தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டேனியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டன.
இதன்போது, சபையில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் வருகை தந்ததோடு, ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை.
முதல்வர்
அத்துடன், அங்கிருந்த அதிக உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.
இதன்போது, கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 06 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டேனியல் வசந்தனுக்கு 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில், கூடிய வாக்குகளை பெற்ற டேனியல் வசந்தன் மன்னார் நகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கியிருந்தது.
உப தவிசாளர்
இந்தநிலையில், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசைன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன்போது, கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர். வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசைன் 08 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில், கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது உசைன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கியிருந்தது. குறித்த தெரிவுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
