அகமதாபாத் விமான விபத்து பின்னணி: வெளியான அறிக்கையால் பரபரப்பு
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன், இவ்வாறு நடந்துள்ளது என்றால் இதுவொரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்போது, விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரிய வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நிபுணர்களின் விளக்கம்
குறித்த விமானி, மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் மறுப்பு தெரிவித்துள்ளது. விமானத் தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்றவே இறந்த விமானிகள் மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.