அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி: கொழும்பில் தேசிய செயலமர்வு இன்று ஆரம்பம்
அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு, அதன் அரச நிர்வாகம் தொடர்பான செயற்திட்ட அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அரச துறையில் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடனும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவது குறித்து சிரேஷ்ட அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதே இந்தச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.
கட்டுப்பாட்டுச் சட்டகம்..
குறிப்பாக, சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், தரவு முகாமைத்துவம், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய அரச கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இதில் பரந்த அளவில் கவனம் செலுத்தப்படும்.

மூன்று நாள் நிகழ்ச்சியில், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், உற்பத்தித்திறன் சார்ந்த மற்றும் முகவர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்படும்.
விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழுச் செயற்பாடுகள் மூலம் அரச அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், சான்றுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.