நீதிபதியே கொலையாளியாகவும் மருந்தே நஞ்சாகவும் மாறியிருக்கும் ஈழத்தமிழ் அரசியல் - தி.திபாகரன்
"ஒடுக்குமுறையாளனின் வன்முறையை ஒடுக்கப்படுவோனின் வன்முறையோடு சமப்படுத்த முடியாது. சமப்படுத்தவும் கூடாது". என்ற தோழர் லெனினின் தத்துவார்த்த ரீதியான அரசியல் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் செயற்பாட்டை நோக்குவது தமிழர் அரசியலுக்குப் பயனுள்ளதாக அமையும்.
இது அவர்களின் ஐ.நா சபை நோக்கிய அரசியல் செயற்பாட்டுக்கு மட்டுமல்ல கடந்த 12 ஆண்டுக்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயல்முறைக்கும் பொருந்தும் என கட்டுரையாளர் தி.திபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழினப்படுகொலை செய்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசு மேற்கொள்கின்ற அரச பயங்கரவாத வன்முறையையும், அவர்களால் மேற்கொள்ளப்படும் அந்த இனப்படுகொலையின் அழிவிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகவும் , ஒடுக்குவோனின் அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் ஒடுக்கப்படும் தமிழினம் ஏந்திய துப்பாக்கிகளும், அவர்கள் மேற்கொள்கின்ற வன்முறையையும் ஒரே தராசில் வைத்துச் சமப்படுத்தப்பட முடியாது, சமப்படுத்த முற்படவும் கூடாதது. இதுவே தத்துவார்த்த ரீதியிலான அரசியல் உண்மையாகும்.
இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் இனம் தன்னை பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற தற்காப்பு நடவடிக்கையை வன்முறை என்று அப்படியே வெறுமனே வகைப்படுத்த முடியாது. இது சிறிய உயிரிலிருந்து மனிதன் வரையான பிரபஞ்சத்தின் அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானதான உண்மையாகும். தற்பாதுகாப்பே எல்லாவிடங்களிலும் உயிர்களுக்கு முதன்மை பெறுகின்றது.
தமிழ் அப்புக்காத்து அரசியல் வாதிகளின் அரசியல், அறிவியல் வறுமையின் உச்சக்கட்டம்தான் "இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் செய்தார்கள், இவர்கள் இருதரப்பையும் விசாரிக்க வேண்டும்" என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் .ஏ சுமந்திரன் கூறுவது, இந்த சட்டத்தரணிகளுக்கு முதலில் தாங்கள் யார் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பிதற்றுகிறார்களா? அல்லது கோடாலிக் காம்புகளாக இருந்து எதிரிக்குச் சேவகம் செய்கின்றார்களா? என்பது இங்கு முக்கியமானது.
தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் இலங்கையின் இனப்பிரச்சினையையும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும் தத்துவார்த்த ரீதியில் ஆராய்ந்து பார்க்கத் தெரியாதவர்கள். இவர்களுக்கு மெய்யியல் பற்றிய எந்த அறிவும் கிடையாது.
இத்தகைய சட்டத்தரணி அரசியல்வாதிகளின் பேச்சுக்களும், செயல்களும் தமிழ் மக்களின் இருப்பை தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கின்றன. தத்துவார்த்த ரீதியில் இவர்களின் செயல்களை இங்கே ஆராய்வது தற்போது பொருத்தமானது.
முதலில் இந்தப் பொழுது போக்குப் பகுதிநேரச் சட்டத்தரணி அரசியல் வாதிகள் யார்?. இந்தப் பகுதிநேரப் பொழுது போக்கு தலைவர்கள் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள். அப்படியாயினுங்கூட இவர்களைத் தமிழ் மக்கள் ஏன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்தார்கள்?
சிங்கள அரசால் அடக்கி ஒடுக்கப்படும் தம்மைப் பாதுகாப்பதற்காகவும் தமது பக்க நியாயங்களை நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் பேசுவதற்காகவுமே. அப்படியானால் இவர்கள் யாருக்காகப் பேசவேண்டும்? இவர்கள் தமிழ் மக்களுக்காகவே பேச வேண்டும். உண்மைதான்.
இவர்கள் தம்மைத் தெரிவுசெய்த தமிழ் மக்களுக்காகத்தான் பேசவேண்டும். இவர்கள் தமிழ் மக்களுக்காகத்தான் பேசுகிறார்களா? இல்லையே!. மாறாக இவர்கள் சிங்கள அரசைப் பாதுகாப்பதற்காகவே பேசுகிறார்கள். அப்படியானால் இவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது.
இவர்கள் தமிழ் மக்களுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, இவர்கள் தமிழ் மக்கள் நலன்களைக் கடந்து வேறு யாருடைய நலன்களுக்காகவும் பணப்பெட்டிகளுக்காகவும் உழைக்கிறார்கள், சேவகம் செய்கிறார்கள் என்பது பொதுவான பொது உண்மையாகின்றது.
இதை இன்னொரு வகையாகப் பார்ப்போம் . இவர்கள் சட்டத்தரணிகள். இவருடைய வழக்காடு மன்றங்களில் இவர்கள் யாருக்காகப் பேசுகிறார்கள்? தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு மாத்திரமே பேசுகிறார்கள். அதைவிடுத்து எனது கட்சிக்காரர் தவறிழைத்தார்.
எதிர்க் கட்சிக்காரரும் தவறிழைத்தார் என்று இவர்களால் பேச முடியுமா? அல்லது பேசினார்களா? இல்லையே! தனது தரப்பினர் திருடினாலும், கொலை செய்திருந்தாலும் அவர் திருடவில்லை என்றும், அவர் கொலை செய்யவில்லை என்றும், இன்னுமோர் படி மேல் சென்று அவர் அப்பாவி என்றும், நன்மனிதர் என்றும் தமது வழக்காடு மன்றங்களில் தொண்டை கிழியக் கத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகை சட்டத்தரணிகள் அரசியலுக்கு வந்தவுடன் நாடாளுமன்றத்திலும் சர்வதேச பிரதிநிதிகளுடனும் தமது மக்களுக்காகப் பேசாமல் இரண்டு தரப்புக்களுக்காகவும் பேசி இரட்டை முகவர்களாக, விலைபோகும் ஓடுகாலிகளாகச் செயற்படுவதற்கான காரணம் தான் என்ன? எல்லாம் பணமுடிச்சுக்கான கடைந்தெடுத்த சுயநலமே. அதுவே அவர்களை தன்னின உண்ணிகளாக்கியுள்ளது.
அரசியலைத் தத்துவார்த்த மதிப்பீடு (Philosophical assessment), அரசியல் தீர்வு (Political solution), சட்ட ஏற்பாடு(Legal arrangement), நடைமுறை(Practice) என்ற படிநிலைக்குள்ளால் புரிந்தும் முன்னெடுக்கவும் வேண்டும்.
வழக்காடல் என்பது எழுதப்பட்ட சட்ட வரம்புக்குள் குறித்த குற்றம் அடங்குகின்றதா அல்லது அதற்குப் பொருந்துகிறதா என்ற பொருத்தப்பாட்டை மட்டுமே விளக்குவது. எனவே நீதிபதியால் குற்றம் என்று தெரிந்திருந்தும் எழுதப்பட்ட சட்டங்களால் குற்றம் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்ப்பு வழங்கப்படும் விநோதம் நிகழ்த்தப்படும். குற்றவாளி இங்கே தப்பித்து விடுகிறான்.
இதுவே நீதிமன்ற சட்ட வழக்காடலாகும். எனவே தமிழ் சட்டத்தரணி அரசியல்வாதிகளால் வழக்காடு நீதிமன்ற பழக்கவழக்கங்களுக்கு உள்ளாலும், நீதிமன்ற முறைமைகளுக்கு உள்ளாகவும் பழக்கப்பட்டவர்களால் அரசியலை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. அரசியலுக்குள்தான் சட்டம் வருகின்றது. சட்டத்துக்குள்தான் நீதிமன்றம் வருகின்றது. நீதிமன்றத்துக்குள்தான் வழக்காடு வருகின்றது.
எனவே வரையப்பட்ட வரம்பு, கட்டப்பட்ட வேலி, என அடைக்கப்பட்ட நீதிமன்றத்துக்குள் கட்டிவைக்கப்பட்டிருக்கின்ற வழக்காடல் போன்று அரசியலைச் செய்யவும் முடியாது. பார்க்கவும் கூடாது. அரசியல் தத்துவார்த்த ரீதியில் நோக்கவும், வியாக்கியானப்படுத்தவும், செயற்படுத்தவும் வேண்டும். ஐநா மனித உரிமை மன்றத்தில் அறிக்கை ஒன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்த போது அதனை எதிர்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினார்.
இந்த வெளியேற்றம் ஏதோ கட்சிக்குள் கொள்கை ரீதியாகப் பிளவு ஏற்பட்டு விட்டது, கட்சி இரண்டாக உடைந்து விட்டது என்று சில தமிழ்த் தரப்பினர் கற்பனை பண்ணி கனவு கண்டு துள்ளிக் குதிக்கின்றனர்.
உண்மையில் அடிப்படையில் அங்கே எந்தப் பிளவும் கிடையாது. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தயாரித்த நாடகத்தின் கதாபாத்திரங்களை அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி நன்றாகவே நடிக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.
எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றப்போவது நிச்சயம். ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் இந்த வாரம் நடந்து கொண்டிருக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் ஐநா முன்றலில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தாயகத்தில் தமிழ் கட்சிகள் தாம் ஐநா மன்றத்துக்கு அனுப்பிய அறிக்கை பற்றிய வீரப் பிரதாபங்களைக் கூறி தாம்தான் சரியானவர் என்று அதை நிரூபிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்க்குமிடத்து ஈழத்தமிழர்கள் அரசியலிலும், அறிவியலிலும், ராஜதந்திரத்திலும் இருந்து வெகு தொலைவில் அந்நியப்பட்டு நிற்கிறார்கள் என்பது வேதனை அளிக்கும் விடயமாகும். தமிழ் மக்கள் இன்று மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஒடுக்குவோமானால் மட்டும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்காக நியாயம் கேட்க நியமிக்கப்பட்டவர்களாலும் தம் தலைவர்கள் என அந்த மக்களால் நம்பப்படும் தலைவர்களாலும் மேன்மேலும் ஒடுக்கப்படுகிறார்கள். ஆக ஒட்டுமொத்தத்தில் தமிழ் அரசியல் பரப்பில் நீதிபதிகளே கொலையாளிகளாகவும், மருந்தே நஞ்சாகவும் மாற்றப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
தமிழ் மக்கள் அரசறிவியல் விழிப்புணர்வு அடையாவிட்டால் இந்த இனம் இந்தப் பிரபஞ்சத்தில் நிலைக்க முடியாது போகக்கூடியதற்கான யதார்த்தம் மேலோங்கியுள்ளது.
தக்கன பிழைக்கும், தகாதன அழியும்"" என்ற டார்வீனியக் கூற்றைக் கருத்திலெடுத்து செயற்பட வேண்டும். முதலில் தமிழ் மக்களைத் தகாதனவாக மாற்றும் சுயநலக் கும்பலைப் பெரிதும் ஓரங்கட்டாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலமில்லை.
இத்தகைய தன்னின உண்ணிச் சுயநலக் கும்பல்களை ஓரங்கட்டுவதற்கான பாரிய பணியில் அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் பெரும் சக்தியாய்த் திரண்டு செயற்பட வேண்டிய ஓர் இறுதிக் கட்டத்தில் தமிழினம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.