அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது..
ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து மனித நாகரிகத்தின் அடிப்படை உரிமைகளை மீட்பதற்காகவும், மானிடத்தின் ஜனநாயக விழுமியங்களை காப்பதற்காகவும், தமிழினத்தின் சுபீட்சமான வாழ்விற்காகவும், தமிழர்தாயக நிலத்தில் நீண்ட நெடுங்கால வாழ்விற்காகவும், தமிழினத்தின் தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக உடல்- பொருள் -ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து போராடவீரப்பரம்பரை ஒன்று புறப்பட்டது.
இவ்வாறு அர்ப்பணிப்பு இன்றி விடுதலை இல்லை, தியாகங்களின்றி சரித்திரங்கள் இல்லை என ஈழத்தமிழர் விடுதலைக்காக புயலாக புறப்பட்ட தேசத்தின் மைந்தன் சங்கரின் சாவுக்கான திகதி குறிக்கப்பட்டு இருந்ததையோ, அது புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப்போவதையோ அறியாமல் 1982ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் யாழ்பாணத்தின் அன்றைய காலைப்பொழுது விடிந்தது.
1982 ல் சாவகச்சேரி பொலிஸ்நிலைய தாக்குலில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவப் பொருட்களை வணக்கத்துக்குரிய பிதா சிங்கராயர் அவர்கள்தான் கொழும்பில் கொள்வனவு செய்திருந்தார். அவரது ஆச்சிரமத்தை எதிர்பாராதவிதமாக சோதனையிட்ட இரகசியப் பொலிஸாரிடம் அம்மருந்துப் பொருற்களுக்கான பற்றுச்சிட்டைக்கள் அகப்பட்டுவிட்டன.
கொடுமையான சித்திரவதை
அதனால் கைதாகிய பிதா சிங்கராயர் கொடுமையான சித்திரவதை விசாரணையின் போது உண்மைகளைச் சொல்லிவிட்டார்.
அதன் விளைவாக, போராளிகளுக்கு சிகிச்சையளித்த அருட்சகோதரர்களும் வைத்தியர்களுமான இரட்டையகள் சின்னராசா, குருகுலராசா ஆகிய இருவரும் கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட கடுமையான விசாரணையின் போது யாழ் பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் வீட்டில் சிகிச்சையளிப்பட்மை தெரியவந்தது. உடனே அவரது வீட்டை நோக்கி படையினர் பாய்ந்தனர்.

நாவலர் வீதியும் நல்லுார் குறுக்கு வீதியும் சந்திக்கும் சந்திக்கு எதிரேயுள்ள பொருளியல் விரிவுரையாளர் மு. நித்தியானந்தனின் வீட்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயமடைந்த சீலன் (பின்னாளில் சாள்ஸ் அன்ரனி) உள்ளிட்ட நான்கு போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வெளியேறிய நிலையில் 20/11/1982 அன்று மகிழ்ச்சியின் நிமித்தம் அங்கு அந்தப் புலிவீரர்களுக்கு விருந்துபசாரம் நிகழ்தது.
போராளிகள் ஒருவர், இருவராக சென்று உணவருந்திவிட்டு திரும்பிவிட்டனர். மாலை 3:00 மணியளவில் இறுதியாக அங்கு சென்ற லெப் சங்கர் வீட்டினுள்ளே விரிவுரையாளருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.
அவ்வேளை வீட்டினுள் சிங்களப்படை திடீரென தேடுதல் வேட்டைக்காக புகுந்து கொள்ள. உடனே சங்கர் தன்னுடைய இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை தொட்டவாறு நிலைமையைச் சுதாகரித்துக் கொள்கிறார்.
சிங்களப்படைக்கு எதிராக அந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நாற்புறமும் வீதிகளைக் கொண்ட அந்த வீட்டில் இருந்து அவரால் இலகுவாகப் பின்வாங்கி தப்பித்தச் செல்வது சாத்தியம். ஆனால் தனது கைத்துப்பாக்கியால் சுட்டால் அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை உணர்ந்தார்.
இராணுவத்தால் கைது
மறுகணமே தன் முடிவை மாற்றிக்கொண்டு வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று கிலுவைக்கதியால் வேலியை வேகமாக பாய்ந்து தாண்டும் போது இராணுவத்தினரின் சரமாரியான துப்பாக்கி வேட்டில் துப்பாக்கிரவை ஒன்று சங்கரின் அடிவயிற்றுப் பகுதியை காயப்படுத்தியது.
ஆயினும் இலட்சி வேங்கை சங்கர் உறுதியுடன் மனம் தளராது வேகமாக தப்பிச் சென்றார்.
ஆத்திரமடைந்த சிங்ளப்படை நடாத்திய துப்பாக்கிச் வேட்டில் சிறி என்றழைக்கப்படும் பாடசாலை மாணவி காயமடைந்தார். மு.நித்தியானந்தனும் கூடவே அவரது துணைவியாரும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர்.
சமநேரத்தில் காயமடைந்து இரத்தம் பீரிட்டவாறு டக்கா வீதியில் தப்பி ஓடிக்கொண்டிருந்த சங்கரை அவ்வீதியால் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த ஈரோஸ் இயக்கத்தைச் சார்ந்தவரும் , பல்கலைக்கழக மாணவரும், பின்னாட்களில் ஒரு சமூக முக்கியஸ்தரும் , அரசில் , சிவில் சமூக பிரமுவருமான செல்வின் கண்டுவிட்டார்.
உடனே தனது கரங்களால் தாங்கிப்பிடித்து சங்கரை மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வேகமாக திருநெல்வேலில் உள்ள போராளிகளின் மறைமுக முகாம் நோக்கி விரைந்தார். மாலை 4 மணிக்குள் குமாரசாமி வீதி 41ம் இலக்க புலிகளின் மறைமுக முகாம் வீட்டில் பாதுகாப்பாக சங்கரை சேர்ப்பித்தார்.
மாலைநேரம் போராளிகளும் ஆதரவாளர்களும் விரைவாக தொழிற்பட தொடங்கினர். மருத்துவர் கெங்காதனிடம் அவசர உதவி கோரப்பட்டது.
அன்றைய பதட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாது. ஆகையால் தனியிடத்தில் சிகிச்சையளிக்க மருத்துவர் இசைந்ததற்கிணங்க தீவிர ஆதரவாளரான பல்கலைக்கழக மாணவருமான ஜெயரெட்டி தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்று தனியிடத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது.
தமிழக படகுப் பயணம்
ஆனால் உள்ளக இரத்தக்கசிவுக்கு யாழ்பாணத்தில் வைத்து சிகிச்சையளிப்பது பாதுகாப்பற்றது என்ற நிலையில் தமிழகம் கொண்டுசெல்லும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
அன்றிரவு சங்கர் கொக்குவில் அம்பட்டப்பலத்தடியில் உள்ள ஒரு வீடடில் (ரவிசேகரின் அறையில்) பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார். ஐந்து நாட்களாக தமிழக படகுப் பயணம் பல்வேறு தடைகளால் தாமதப்பட்டு நவம்பர் 26 இரவு தமிழகம் நோக்கி பயணப்பட்டார்.

சங்கரை மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் கொண்டு செல்ல அன்று இயக்கத்திலிருந்து விலகியிருந்த அன்டன் சிவா (சிவகுமார் தற்போது கனடாவில்) நியமிக்கப்பட்டார். 27ம் நாள் அதிகாலை தமிழக கரையை அடைந்த சங்கரை இயக்க ஆதரவாளாரான மூதாட்டி ஒருவரின் வீட்டில் தங்கவைத்துவிட்டு, அன்ரன் சிவா தலைவரை சந்திக்க மதுரைக்கு சென்று தகவல் சொல்லி தலைவரை சங்கரிடம் அழைத்துவந்தார்.
எனினும் ஏற்கனவே மூதாட்டி வீட்டில் படுகாயத்தின் வேதனையில் முனகிக்கொண்டிருந்த சங்கர் தாகம் மேலிட தண்ணீர் கேட்க மூதாட்டி கோப்பி தயாரித்து வழங்கினார்.
கோப்பி அருந்தியதும் ஒவ்வாமையால் விரைவான உள்ளக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்த சங்கர் தம்பி தம்பி என தலைவரை நெடுநேரம் அழைத்துக்கொண்டே மாலை 6:05க்கு தமிழகத்தின் மதுரை மண்ணுல் தலைவரின் அணைப்பில் அவரது மூச்சு நின்றுபோனது. அன்றைய காலச் சூழலில் சங்கரின் வித்துடலை பூரண மரியாதைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தகனம் செய்யமுடியாது.
எனவே சங்கரை தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு நிதிவசதி இல்லையெனவும் கூறி, மரணச்சான்றிதழ் ஒன்றினைப் பெற்று இரவு நேரம் எடுத்துச் சென்று மதுரையிலுள்ள ஒரு சுடுகாட்டில் மூத்த போராளிகளான பேபி சுப்பிரமணியம், பொன்னம்மான், தேவர் உட்பட மற்றும் நெடுமாறன் ஐயாவும் அவரின் கட்சித் தொண்டர்கள் சிலரோடு சென்று அப்பையா அண்ணர் சங்கரது உடலுக்குத் தீ மூட்டினார்.
சங்கரது மரணச் செய்தி
பின் அஸ்தியை சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மறுவருடம்தான் சங்கரது மரணச் செய்தி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு அஸ்தியும் கையளிக்கப்பட்டது.
அன்று சங்கரின் குடும்பத்தினரின் துயரமும் காலதாமதமாக மரணச் செய்தி அறிவிக்கப்பட்டமையால் வெளிப்படத்தப்பட்ட மன ஆதங்கங்களையும் கருத்தில் கொண்டுதான் போராளிகள் வீரச்சாவடைந்தால் உடனேயே குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற முடிவை தலைவர் எடுத்து முள்ளிவாய்க்கால்வரை நடைமுறைப்படத்தினார். அன்றிலிருந்து மாவீரர் விதைப்பு உதயமாகியது.

இன்று அந்த நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் குறியீட்டு நாளாய் பரிணமித்திருக்கிறது. சங்கரின் அடிச்சுவட்டை பின்பற்றி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேசத்தின் புதல்வர்கள் தாயகவிடிவிற்காக தம்மை ஆகுதியாக்கி விடுதலைப் போருக்கு உரமாயினர்.
இம்மாவீரர்கள் தம் இளமைக் காலத்தை துறந்தவர்கள், பணம் பதவி பட்டம் புகழ் ஆசைகளை புறந்தள்ளியவர்கள், இலட்சிய வேட்கையேடு நெருப்பாற்றில் நீந்தியவர்கள், சொல்லொணாத் துன்பங்களை தோளில் சுமந்து தமிழ் மக்களுக்கு ஒளியூட்டியவர்கள், எதற்கும் விலைபோகதவர்கள், அவர்கள் விலைமதிப்பற்றவர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவையும் நெஞ்சில் சுமந்து களமாடியவர்கள் . இத்தகைய மாவீரர்களின் கனவு சுமந்து நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் தமிழீழ மக்கள் உறுதிகொள்கின்றனர்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 24 November, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.