கொங்கோ - உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல்: உலகளாவிய அவசரநிலை அறிவிப்பு
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இதனை "சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை" என அறிவித்துள்ளது.
கொங்கோவின் இத்தூரி மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கப் பகுதியில் இருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 330-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தொற்றுக்கு 'புண்டிபுகியோ' என்ற அரிய வகை எபோலா வைரஸ் திரிபு காரணமாக அமைந்துள்ளது.
எச்சரிக்கை நிலை..
பொதுவாக எபோலா பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் இருக்கும் நிலையில், இந்த குறிப்பிட்ட புண்டிபுகியோ திரிபுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது பிரத்தியேக மருந்தோ கண்டறியப்படவில்லை என்பது தற்போதைய சூழலை மிகவும் கவலைக்குரியதாக மாற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் தீவிர ஆயுத மோதல்கள், பலவீனமான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஏற்கனவே கொங்கோவின் தலைநகரான கின்ஷாசா மற்றும் உகாண்டாவின் தலைநகரான கம்பாலா ஆகிய பகுதிகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதால், பிராந்திய அளவில் இதன் ஆபத்து மிக அதிகமாக இருப்பதாக ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும், இது இன்னும் உலகளாவிய பெருந்தொற்று என்ற நிலையை எட்டவில்லை என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, நாடுகள் தங்கள் எல்லைகளை மூடவோ அல்லது வர்த்தகத் தடைகளை விதிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாறாக, எல்லைகளில் கடுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அண்டை நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.