தமிழர் பகுதிகளில் இன்று 5ஆவது நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கமைய, மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது நினைவேந்தலை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் மண்முனை - வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் நேற்று(16.05.2026) உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் டினேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர் அணி தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


மன்னார்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5 ஆவது நாளான நேற்று(16) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - ஆஷிக்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழபோரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
வேலணை - புளியங்கூடல்
2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளாக வேலணை - புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டுள்ளது.

தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் நேற்று(16) முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்து வரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

மேலதிக தகவல் - கஜி
வவுனியா - திருநாவற்குளம்
முள்ளிவாய்க்கால் - பேரவலத்தை நினைவு கூரும் வகையில் வவுனியா - திருநாவற்குளத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா, திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, மதகுருமார், விளையாட்டு கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - திலீபன்
செட்டிகுளம்
முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று(16.05.2026) உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் ஆரம்பமாக, செட்டிகுளம் அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தையும், செட்டிகுளம் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு வணராஜீ சர்மா ஐயாவும் தீபச் சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர், செட்டிகுளம் பிரதேச மக்கள், உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் திரண்டு, 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் உணவின்றி, நீரின்றி, மருந்தின்றி மடிந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

மேலதிக தகவல் - திலீபன்
மானிப்பாய்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு - கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்றல், சங்கானை மற்றும் அராலி ஆகிய பகுதிகளில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, இறுதிப் போரில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் அவலத்தின் குறியீடான 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - ராகேஷ்
திருக்கோவில்
திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நேற்று(16.05.2026) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் நடைப்பெற்றுள்ளது.

மேலதிக தகவல் - ஆஷிக்
நாவிதன்வெளி - கல்முனை
நாவிதன்வெளி - கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நினைவு சுடரினை ஏற்றி வைத்த பின்னர் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாம் ஒரு கனத்த இதயத்தோடு இங்கு கூடியிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், தீராத துயரமாகவும் நிலைபெற்றிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு வாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த மண்ணுக்காகவும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி, முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்துபோன ஆயிரமாயிரம் உறவுகளை இந்த நேரத்தில் மிகுந்த மரியாதையுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்கின்றேன்.
முள்ளிவாய்க்கால் என்பது வெறும் இடத்தின் பெயர் மட்டுமல்ல அது தமிழினத்தின் ஒட்டுமொத்த வலி. பசியாலும், தாகத்தாலும் எமது சொந்தங்கள் கொத்து கொத்தாக மடிந்த அந்த நாட்கள், காலம் கடந்தாலும் நம் நினைவுகளில் இருந்து மறையாது.
அந்த தியாகங்களை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூருவது என்பது வரலாற்று கடமையாகும்.

உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியோரம் நின்று நீதி கேட்டுப் போராடும் அவலம் தொடர்கிறது.
நாம் செலுத்தும் இந்த சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல; இது நீதி வேண்டிய ஒரு அறப்போராட்டம். உலக நாடுகள் எம் மக்களின் வலியை உணர வேண்டும், நமக்கான அரசியல் தீர்வையும் நீதியையும் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இந்த நினைவேந்தல் ஊடாக உரக்கச் சொல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியதாஸ தர்மதாஸ, நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ.சுதர்சன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - ஷிஹான் பாரூக்
முல்லைத்தீவு - கற்சிலை மடு
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - கற்சிலை மடுவில் நேற்றையதினம்(16.05.2026) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - கஜி
மூதூர் -பாரதிபுரம்
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் -பாரதிபுரம் பிரதேசத்தில் இன்று (17.05.2026) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வை பாரதிபுரம் கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - கியாஸ் சபி
திருகோணமலை - சிவன் கோயிலடி
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று(17.05.2026) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகளில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்மாக உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் சிக்குண்டு பரிதவித்தோரின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளை(18.05.2026) மாலை வரை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலையிலிருந்து செல்வோருக்கான விசேட பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ரொஷான்
மூதூர் - நாராயணபுரம்
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் - நாராயணபுரம் பாலத்தடிசேனை கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வை நாராயணபுரம் பாலத்தடிசேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச விசேட தேவையுடைய சங்கத்தின் தலைவி மகேந்திரன் சுகிர்தபிரியா மீராஜி என்பவரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கியாஸ் ஷாபி
வட்டுக்கோட்டை - பொன்னாலை
தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம்(17.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இனப்படுகொலை நிரைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக் வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சமைக்கப்பட்டு, உணர்வு ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

பி.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜி
மன்னார் - மடு
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொது மக்களின் ஏற்பாட்டில், மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு பகுதியில் இன்றைய தினம் (17.05.2026) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலதிக தகவல் - ஆஷிக்
வவுனியா
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17.05.2026) கட்சியின் அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், பிரதேச சபைகளின் தவிசாளர்களான பா.பாலேந்திரன், தி.கிருஸ்ணவேணி உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - திலீபன்
புது குடியிருப்பு
முள்ளி வாய்க்காலின் நினைவுகள் சுமந்த ஊர்தி கிளிநொச்சி பகுதி ஊடாக புது குடியிருப்பு பகுதியை நோக்கி மக்களின் அஞ்சலிக்காக சென்று நாளைய தினம்(18.05.2026)முல்லத்தீவு முள்ளியவளை ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி வருகை தரும் பொழுது வீதியோரங்களில் மக்கள் திரண்டு தமது அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல் - தேவானந்தன்
கிளிநொச்சி - தரும்புரம்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17.05. 2026) கிளிநொச்சி - தரும்புரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட பிரமந்தனாறு, கொழுந்துப்புலவு மற்றும் மயில்வாகனபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலதிக தகவல் - சுடரோன்
வடமராட்சி - கிழக்கு, மணற்காடு
யாழ்ப்பாணம் - வடமராட்சி , கிழக்கு, மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று(17.05.2026) காலை 10:30 மணியளவில் மணற்காடு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் மணற்காடு பங்கு தந்தை அவர்களால் விசேட வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி இடம்பெற்றுள்ளதுடன் தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள், புலம்பெயர் மக்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
தம்பலகாமம்
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம் பெற்றது.
தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் சந்தியில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தலை பொற்கேணி கிராம பொது மக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தி - ரொஷான்