யாழ். நினைவுத்தூபி தகர்ப்பு விடயத்தை வன்மையாக கண்டித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யுத்த வடுக்களில் இருந்து மீளாத தமிழர்களின் உணர்வுகளை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் செயலாகும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு விடயத்தை கண்டித்து நேற்றைய தினம் விடுத்திருந்த கண்டன அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்.பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியானது கடந்த 08.01.2021 அன்று இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டமையை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.
யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உடமைகளையும் இழந்த நிலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது இடித்து அழிக்கப்பட்டமை யுத்த வடுக்களில் இருந்து மீளாத தமிழர்களின் உணர்வுகளை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் செயலாகும்.
இந்தச் செயலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு வாழ் சமூகமும் வன்மையாக கண்டிக்கின்றது.
அதேசமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபியானது மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு ,பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாறான தமிழ் மக்களின் அடையாளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வேண்டிக்கொள்கின்றோம்.
அத்துடன் இனிவரும் காலங்களில் இந்த நாட்டில் எந்த ஒரு சமூகத்தின் நினைவுத்தூபிகளையும், வரலாற்று அடையாளங்களையும் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத வகையில் அழிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்விடங்களை பாதுகாக்கும் கடமை இந்த நாட்டில் நல்லிணக்கத்தை விரும்பும் அனைவருக்கும் உரித்துடையதாகும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
மேலும் குறித்த நினைவுத் தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை அன்று வடகிழக்குத் தழுவி அனுடிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு வழங்குவதோடு வடக்கு கிழக்கில் சகல மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.