கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம்! இலங்கையின் தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான புதுடெல்லி மற்றும் டோக்கியோவுடனான 2019 ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததை அடுத்து ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரி ஒருவர், “இலங்கை ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவு கவலையளிப்பதாக” WION செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் மட்டுமே அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சரவை அண்மையில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில், கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா, வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019ம் ஆண்டில் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.