ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் 42 பேருக்கு எதிராக ஜூலையில் வழக்கு - சரத் வீரசேகர
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிராக ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் தன்னிடம் கூறியதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு, லெக்டோஸ் தோட்டம் பகுதியில் வெடிப்பு பொருட்கள் மீட்கப்பட்டமை, வண்ணாத்துவில்லு சம்பவம், தஸ்ரின் என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் உட்பட 8 சம்பவங்கள் தொடர்பாகச் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனால், இந்த விசாரணைகள் தொடர்பில் மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தக் காரணங்கள் இல்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.