உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்! மரிக்கார் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைப் போன்று, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூழ்ச்சிதாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான 71 ஆயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முழுமையான நீதி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்று தெரிவித்தே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தவறு என்று கூற வரவில்லை.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டுமென்றால், தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று, இதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சூழ்ச்சிதாரிகளுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஒரு குழுவினர்தான் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டனர். அதனால்தான் அவர்களால் அதனைத் தடுக்க முடியாமல் போனது. எனவே, பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும். சஹ்ரானை வழிநடத்தியவர்களும் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அரசின் நிதி மற்றும் வருமானக் கொள்கை குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
"அரசு மேலதிக வருமானத்தைத் தேடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஆனால், இந்த மேலதிக வருமானத்துக்காக அரசு வரிகளை அதிகரித்து சாதாரண மக்களுக்கு எவ்வாறான அழுத்தங்களைக் கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அரசுக்கு 71 பில்லியன் மாத்திரமல்ல, அதனைவிட அதிகமான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அவ்வாறே திறைசேரிக்கு மீள அனுப்பப்படுகின்றது.
அவ்வாறில்லாமல், அரசு திறம்பட நிதி முகாமைத்துவம் செய்து மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
மாறாக, அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் மீளப் பெற்றுக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.