கிழக்கில் 24 மணித்தியாலத்தில் 211 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 211 கோவிட் -19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் வாகரை மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்திற்கு உட்பட்ட பகுதியில் 115 தொற்றாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 தொற்றாளர்களும் ,கல்முனைப் பிராந்தியத்தில் மூன்று தொற்றாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 6 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் நோயாளர்களின் தொகை அதிகரித்துவரும் நிலையைக் கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்..கொஸ்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (01) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் நோயாளர்களுக்கான வைத்திய தேவைகளுக்காக இரண்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக கோமரங்கடவல வைத்தியசாலையும் குறித்த நோய்க்கான சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எதிர்வரும் 10ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு மேலதிகமாக கந்தளாய் சீனி தொழிற்சாலை மற்றும் மாவட்ட இளைஞர் அபிவிருத்தி திட்டங்களுக்கான கட்டடங்களையும் மேலதிக சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 53 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, உப்புவெளி 19, மூதூர் 11, தம்பலகாமம் 6, அடங்கலாகத் திருகோணமலை மாவட்டத்தில் 53 கோவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அதிக தொற்று பரவல் நிலவும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளாக மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் நோய்
தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் முடக்கல் நிலை
அறிவிக்கப்படக்கூடும் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
டி.ஜீ.எம்.கொஸ்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.