துமிந்த சில்வாவிற்கு நியாயம் கிடைத்துள்ளது! - அமைச்சர் நாமல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்று நியாயம் கிடைக்கப் பெற்றுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் வேண்டுமென்றே துமிந்தவை தண்டித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். குரல் பதிவுகள் மூலம் இந்த விடயம் அனைவருக்கும் வெளிச்சமாகியது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், துமிந்தவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வா மற்றும் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு இன்று ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை ஆரோக்கியமான ஓர் நகர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக இதுவரையில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.