தடுப்புக்காவல் முறையில் அதிரடி மாற்றம்.. நீதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மின்னணு கண்காணிப்பு மூலம் தண்டனை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "நீதிமன்ற வழக்குகளை விரைவுபடுத்துவது என்பது எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
1.1 மில்லியன் வழக்குகள்
நீதிமன்றங்கள், நீதிபதிகள் சம்பளம் சம்பாதிக்கும் இடங்களோ, சட்டத்தரணிகள் பணம் சம்பாதிக்கும் இடங்களோ அல்ல.

மக்களின் நேரத்தையோ பணத்தையோ வீணாக்காமல் வழக்குகளைக் கேட்டு முடிக்கவே அவை உள்ளன. தற்போது நீதிமன்றங்களில் சுமார் 1.1 மில்லியன் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அடுத்த விசாரணை திகதி ஒரு வருடம் தாமதமாகும் அளவுக்கு உள்ளது.
புதிய தலைமை நீதிபதி பதவியேற்றதிலிருந்து, முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை, தாக்கல் செய்யப்படும் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஈஸ்டர் வழக்கு மற்றும் லஞ்ச வழக்குகளுக்கு ஏற்கனவே தனித்தனி நீதிமன்றங்கள் உள்ளன.
சிறையில் உள்ளவர்கள்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், மேலும் இரண்டு நீதிமன்றங்கள் வழங்கப்படும், மேலும் ஐந்து நீதிமன்றங்கள் அளுத்கமவில் ஒரு புதிய கட்டிடத்தில் திறக்கப்படும். எங்கள் சிறைச்சாலைகள் 10,500 பேரை அடைக்கும் வகையில் கட்டப்பட்டன.

ஆனால் இன்று 39,000 பேர் உள்ளனர். எங்கள் பிரச்சினை தண்டனை பெற்ற 10,000 பேர் அல்ல. தண்டனை பெறாத 28,000 பேர்தான். இவர்களில் சுமார் 20,000 பேர் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்.
இதற்காக ஒரு புதிய சட்டமூலத்தை கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பதே இதன் நோக்கம்.
மின்னணு கண்காணிப்பு மூலம் தண்டனை செயல்படுத்தப்படும். அப்படி நடந்தால், சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்பு ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam