அரசியல் தலையீடு என்பது தூய்மையானதாக இருப்பது அவசியம்: டக்ளஸ் தெரிவிப்பு
"அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம். ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியம்." என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளியில் இன்றைய தினம் (09.03.2024) எரிபொருள் நிலையம் திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், " பொதுமக்கள் என்னிடம் முன்வைக்கும் கோரிக்கைகளில் நியாயத் தன்மை இருந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில் நிறைவு செய்து கொடுப்பது எனது இயல்பு. அதன் ஒரு செயற்பாட்டில் தான் இந்த பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிலையமும் அடங்கும்.
தோல்வியுற்ற சமீப தலையீடு
நான் யாழ் மத்திய கல்லூரியின் ஒரு பழைய மாணவனாக இருக்கலாம் ஆனால் இவ்வாறான ஒரு செயற்பாட்டைத்தான் யாழ் மத்தியகல்லூரி விடயத்திலும் நான் மேற்கொண்டிருந்தேன்.
அதேபோன்றே, மகாஜனா கல்லூரி விடயத்தையும் கையாண்டிருந்தேன். மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அதை நிறைவுசெய்து கொடுப்பதே எனது நீண்டகால செயற்பாடாகவும் இருந்து வருவதுடன் தொடர்ந்தும் அது இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.
இதேவேளை, இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் தனது கருத்தொன்றில் மத்திய கல்லூரி அதிபர் நியமன விடயத்தில் நான் அரசியல் தலையீடு செய்திருந்தேன். இதனால் அது வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்விற்றுறையில் ஒரு கறுத்த நாளாக அமைந்துவிட்டது.
முறையான அரசியல் தலையீடு
ஆனால், இன்று இந்த எரிபொருள் நிலையத்தை திறப்பதற்கு என்னுடைய தலையீட்டினால் தான் சாத்தியமானது.இதேவேளை ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் நான் கடந்த காலங்களில் கருத்துக்களை கூறி வந்திருக்கின்றேன்.
தவறான வழிநடத்தலால் தான் இந்த அழிவுகளும் இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை இன்று தமிழ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
அதேபோன்று நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதம் ஏதோ ஒரு வகையில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மக்கள் அமைதியாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இதேநேரம் எனது நிலைப்பாடு இருப்பதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என்பதாகும்.
அந்தவகையில், சரியான அரசியல் தலையீடு, அரசியல் நெறிப்படுத்தல் மற்றும் அரசியல் வழிநடத்தல் என்பன எந்தவொரு விடயத்திற்கும் அவசியமானதாக இருக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
