தமிழ் அரசியல் தோல்விகள் குறித்து டக்ளஸ் விமர்சனம்!
மாற்றுக் கொள்கையும், மாற்று வேலைத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நியாயமாகியும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் நிலைப்பாடு
அவர் மேலும் கூறுகையில்,
அன்று நாம் மாற்றுக் கொள்கையுடன் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கில் திட்டங்களை முன்னெடுத்த போது, இதர தமிழ் தரப்பினர் அதை ஏளனமாகக் கண்டனர். தமிழ் அரசியல் தலைமைகள் தங்களை பாதுகாக்கவும், தங்களது இருப்பைத் தக்கவைக்கவும் தவறான மற்றும் சாதகமற்ற வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்ததன் விளைவுகளை மக்களே அனுபவிக்க நேர்ந்தது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், அக்காலத்தில் தமிழ் தரப்பில் அவை உருவாகாத காரணத்தால் கிடைக்கக்கூடிய தீர்வுகள் கைநழுவிச் சென்றன.
மக்களின் உணர்வுபூர்வ தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதகமான வழிமுறைகளை முன்னெடுத்துச் செல்லுவது அவசியமாகும்.
இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில், தென்னிலங்கை கட்சிகளின் நேரடி பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லுவோர், அக்கட்சிகளின் கொள்கை மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்பட வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆனால், ஈ.பி.டி.பி அவ்வாறானதல்ல.
இதுவே எமது தனித்துவமாகும். எமது இந்த தனித்துவத்தின் அடிப்படையில், கூட்டாட்சி அமைப்பில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டை முன்வைத்து நாம் செயல்பட்டு வருகின்றோம். இது நடைமுறையில் சாத்தியமானதுடன், இன்றைய சூழலிலும் அதனை சாத்தியமாக்க மக்களிடம் கொண்டு செல்லுவது அவசியம் என்றார்.
