டொலர்கள் வாங்கி ஆயுத கொள்வனவு: அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் - சுரேஸ்
கள்ளச்சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டுப் பிரஜையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கறுப்பு சந்தையில் டொலர்களை வாங்கி வடகொரியாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக இலங்கையின் நிதி அமைச்சரும் அமெரிக்கப் பிரஜையுமான பசில் ராஜபக்ச கூறியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமை,சுயாட்சி போன்றவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது. விடுதலைப் போராட்டம் என்பது பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். ஆனால் 2005 ஆண்டிற்கு பிற்பாடு இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாகப் போராட்டத்தை முன்னெடுத்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பல கோடிகளைச் செலவிட்டு ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது. முக்கியமாக சீனாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் தற்போது வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை வேண்டியதாகக் கூறுகின்றார்கள்.
வடகொரியாவிலிருந்து பல மில்லியன் டொலர்களுக்கு கடன்களாக இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இராணுவ தளபாடங்களின் கொள்வனவு மற்றும் கடன் என்பன தற்போது எங்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் பசில் ராஜபக்சவின் இத்தகைய விடயம் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் அமெரிக்கப் பிரஜையாக இருக்கின்ற இன்றைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தெரியும்.
அன்றைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இன்றைய நிதியமைச்சர் ஆகியோர் அமெரிக்கப் பிரஜையாக இருந்தவர்கள். அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் இவர்கள் கள்ளச்சந்தை மூலம் டொலர்களை கடத்தி அங்கிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம் என ஏற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அமெரிக்க அரசு பசில் ராஜபக்சவை மாத்திரமன்றி அன்றைய காலகட்டத்தில் இலங்கையை வழிநடத்திய தலைவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.
அன்று கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதற்கு உதவியாக இருந்தது.
யுத்தத்திற்காகக் கள்ளச் சந்தை ஊடாக வடகொரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் என்பது ஒரு மனித படுகொலைக்கும் ,மனித உரிமை மீறலுக்குமாக இலங்கை அரசாங்கத்தால் அப்போது பாவிக்கப்பட்டது என்பதுதான் முக்கியமான விடயம். ஆகவே இத்தகைய விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் நடத்தப்போவது கிடையாது.
ஆனால் இவற்றை மேற்கொண்டது அமெரிக்க பிரஜைகள் என்ற அடிப்படையிலும் இலங்கை நாடு என்பது இவர்களுடன் சம்பந்தப்பட்டது என்பதாலும் தங்கள் பிரஜைகளான பசில் ராஜபக்சவை விசாரிப்பதும் இலங்கை அரசு இதற்கு ஊக்கமளித்தது சம்பந்தமாகவும் விசாரிப்பது அமெரிக்காவின் கடமையென நாம் கருதுகிறோம்.
ஆகவே இவ்வாறான நடவடிக்கைகளைக் கடந்த காலங்களில் இரகசியமாக தாங்கள் நிறைவேற்றியதாகவும் தற்போதும் கூட நாடு வங்குரோத்து நிலையில் டொலர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது ,எதுவும் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது நாளாந்தம் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் எந்தவொரு பொருளுக்கும் விலை நிர்ணயிக்க முடியாது இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் கள்ளச்சந்தையில் டொலர் வாங்கலாம் என்ற சாரப்பட நிதி அமைச்சரின் கூற்று இருக்கிறது. ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை.
ஒரு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாட்டில் அமெரிக்கப் பிரஜையை இவ்வாறான
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உரிய விசாரணை செய்து அமெரிக்க அரசு
உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam