பல கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் (Photos)
நுவரெலியா - டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் (19.01.2023) வைத்தியசாலைக்கு முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் கடுமையான மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்கி, மருந்து சீட்டு கொடுத்தாலும், நோயாளிகள் அதிக பணம் செலவழித்து அந்த மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்
வைத்தியர்கள், தாதியர்களின் சம்பளத்தில் வரிப்பணம் வசூலிக்கப்படுவதால் இவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையால் வைத்தியர்கள், தாதியர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் வைத்தியசாலைகளை எதிர்காலத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு விதிக்கப்படாமையால் நாடு மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளை தலைவர் ரொஷான் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.