ஜே.வி.பியுடன் தம்மிக்க பெரேராவுக்கு மறைமுக டீல்! விமல் குற்றச்சாட்டு
ஜே.வி.பி.கட்சி மற்றும் கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஆகியோருக்கு இடையே மறைமுக டீல் ஒன்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி.கட்சியின் தலைமையகத்துக்குத் தேவைப்பட்ட தரைஓடுகளை (டைல்) கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா இலவசமாக வழங்கியிருந்தார்.
பெரேராவுக்கு சொந்தமான நிறுவனங்கள்
தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஜே.வி.பி.யின் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சங்கம் ஊடாக எந்தவொரு வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப்படக் கூடாது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு தரை ஓடுகளை இலவசமாக வழங்கினார்.
அதே போன்று கட்சியின் தலைமைகயத்தை நிர்மாணிப்பதற்கான சீமெந்து உள்ளிட்ட பொருட்களும் அவ்வாறே ஜே.வி.பி.யின் தொழிற்சங்கம் இருந்த நிறுவனங்களில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு இலவசமாக கிடைத்த பொருட்களைக் கொண்டு பெலவத்தை மற்றும் கடவத்தைப் பிரதேசங்களில் இரண்டு தனியார் இல்லங்களும் நிர்மாணித்துக்கொள்ளப்பட்டன என்றும் விமல் வீரவங்ச குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சங்கத்தின் பிரதானியாக அமைச்சர் வசந்த சமரசிங்க செயற்படவில்லை என்றும் அவருக்கு முந்திய காலத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



