பெருந்தொகையான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பெரும்தொகை பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்றையதினம் (14.06.2023) உத்தரவு வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் அமைந்துள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அவரின் முகாமையாளர் மற்றும் பிரதி முகவர்கள் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தெரிவித்து பல பேரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்நிலையில், சிலர் குறித்த முகவர் நிலையத்தின் துணை நிறுவனம் மூலமாவும் முகவர் நிலைய உரிமையாளரிடம் நேரடியாகவும் சிலர் முகாமையாளர் ஊடாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பல இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.
குறித்த நபர்களில் சிலரை வேலைக்கு அனுப்புவது போல சுற்றுலா விசாவில் துபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், அவர்கள் அங்கு சென்று தொழில் இல்லாது கைவிடப்பட்டு நடு வீதியில் நிர்கதியான நிலையால் தங்களது உறவினருடன் தொடர்பு கொண்டு அவர்கள் தமது சொந்த பணத்தை செலுத்தி விமான சீட்டை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
பொலிஸ் நிலைய முறைப்பாடு
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வெளிநாட்டு வேலை பெற்றுதருவதாக மோசடியில் ஈடுபட்ட பிரதி முகவர்களுக்கு எதிராக பலர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது இரு பிரதி முகவர்களை கடந்த மாதம் கைது செய்து விசாரணையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சுமார் ஒருவரிடம் 6 இலட்சம் ரூபாவரை பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களை மட்டக்களப்பிலுள்ள பிரதான முகவர் ஊடாக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய அந்த பிரதான முகவர் நிலையம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு பொலிஸார் அறிவித்த நிலையில் இது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் தெரியவந்தள்ளது.
அத்துடன், அங்கு கடமையாற்றிவந்த முகாமையாளர் 4 இலச்சம் ரூபாவுக்கு அதிகமாக பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக இருவர் கடந்த (13.06.2023) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை நேற்று (14.06.2023) கைது செய்துள்ளனர்.
ஆரம்பட்ட விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சித்தாண்டி கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை போன்ற பல பிரதேசங்களிலுள்ள பலரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக தானும் ஏனைய பிரதி முகவர்களும் பல இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அதனை முகவர் நிலைய உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு பலரிடம் சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளதாகவும் அவர் கொக்கட்டிச் சோலை முனைக்காட்டைச் சேர்ந்தவர் எனவும் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படல்
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட முகாமையாளரை நேற்றையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை குறித்த முகவர் நிலைய உரிமையாளர், முகாமையாளர் மற்றும் அந்த முகவர் நிலையத்தின் பிரதி முகவர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 50 இலட்சம் பண மோசடி தொடர்பாக 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |