சாத்தான் ஓதும் வேதம்..! எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் அநுர தரப்பு
அன்று ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, ஊடக நிறுவனங்களை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி பேசுவது நகைக்க வைக்கிறது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக அடக்குமுறை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசு ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை செய்யப்பட்டு, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

அதே சமயம், இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களும் கொளுத்தப்பட்டன.
இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் ஊடக பாதுகாப்பு பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குரிய உரிமைகள் நிச்சயம் பாதுக்காக்கப்படும்.
ஊடக நிறுவனங்கள் உண்மையை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.