பிரதேச செயலக அலுவலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்! வெளிநாட்டில் இருந்து வந்த மின்னஞ்சல் செய்தி
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த அச்சுறுத்தலை அடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து, இன்று(29.12.2025) பிரதேச செயலக வளாகம், சேமிப்பு அறை உட்பட அனைத்து பகுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வெடிகுண்டு அச்சுறுத்தல்
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளை பிரதேச செயலக செயலாளர் ரம்யா ஜெயசுந்தரவுக்கு, “ஒரு கூடாரத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது இன்று(29) பிற்பகல் 2:00 மணிக்கு வெடிக்கும் என்றும்” வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட பிரதேச செயலாளர், பிரதேச செயலக ஊழியர்களையும் பிரதேச செயலகத்தில் இருந்த மக்களையும் வெளியேற்றி, அது குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த உடனே, நாவலப்பிட்டி பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க, “பிரதேச செயலகத்திற்கு கிடைத்த மின்னஞ்சல் செய்தியின் அடிப்படையில், பிரதேச செயலக வளாகம் ஆய்வு செய்யப்பட்டதாகவும் இங்கு சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.






