நினைவுச் சின்னங்களை இடிப்பதும் இனப்படுகொலையின் மறுவடிவமே! அரியநேத்திரன் காட்டம்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை உடைத்து அழித்தமை இனப்படுகொலையின் மறுவடிவமாகவே நோக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு இனத்தின் கடந்தகால வரலாறுகள் புத்தகங்களாகவும், எழுத்துவடிவங்களாகவும், நினைவு சின்னங்களாகவும் உலகமெல்லாம் பேணிவருவது ஒரு நடைமுறை மரபாகும்.
அந்த விதமாகத்தான் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி போராட்டத்தின்போது இலட்சக்கணக்காண தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பெரியவர், முதியவர், மாணவர்கள், கல்விமான்கள், மத்தலைவர்கள், புத்திஜீவிகள், தொழிலாளர்கள் என பலர் அடங்குவர்.
இவ்வாறானவர்களின் கண்ணீர் நினைவை பதிவாக்கும் ஒரு வரலாற்று ஆவண நினைவுத்தூபியாக யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல வருடங்களாக வடிவமைக்கப்பப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று இரவு திடிரென பல்கலைக்கழக நிர்வாகம் அந்த நினைவுத்தூபியை எவருக்கும் தெரியாமல் இடித்து தள்ளியது தமிழினப் படுகொலையின் மறுவடிவமாகவே இதனை உணரவைத்துள்ளது.
ஒரு புத்திஜீவித்தளத்தின் நிர்வாகம் இந்த நினைவுத்தூபியை இனப்படுகொலை செய்துள்ளது.
இனப்படுகொலை என்பது இனத்தை மட்டும் அழிப்பதல்ல, அந்த இனத்தின் வரலாற்று பாரம்பரிய நிலம் மொழி கலாசாரம் வரலாற்று சின்னங்களை அழிப்பதும் இனப்படுகொலைகளின் வடிவங்களே.
அந்த வகையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இரவோடு இரவாக இடித்து இனத்தின் வரலாறு கொலை செய்யப்பட்டுள்ளது.
எனவே இதுவும் ஒருவகை இனப்படுகொலைதான் என்பதில் சந்தேகம் இல்லை. இராணுவத்தினர் பல இடங்களில் தமது போர் வெற்றி சின்னங்களாக பல நினைவுத்தூபிகளை வடக்கு - கிழக்கு பகுதிகளில் நிறுவியுள்ளனர்.
இதை தமிழ் மக்கள் எவருமே அகற்றுமாறு யாரிடமும் முறையிடவில்லை, அதை கணக்கில் எடுக்கவும் இல்லை. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் என்பது விடுதலைப்புலிகளின் நினைவுச் சின்னமில்லை.
அது இறுதிப்போரில் இனப்படுகொலையான எமது அனைத்து உறவுகளையும் நினைவுகூரும் ஒரு நினைவு சின்னமாகவே யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை எல்லா மக்களுக்கும் உண்டு. இது அனைத்துலக நீதியும் ஆகும்.
இதை மறுதலிக்கும் விதமாக தமிழ் மக்களின் உணர்வுகளை அடக்கி ஒடுக்கும் அராஜ செயலாகவே இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கும் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள், மௌனம் காப்பார்களா? அல்லது இந்த நினைவுத்தூபியை் மீள்நிர்மாணிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக இந்த நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கி இருந்தாலும் மீண்டும் இந்த நினைவுத்தூபியை அதே இடத்தில் அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு என அவர் மேலும் கூறியுள்ளார்.