றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
றிசாட் பதியூதீன் அதிகாலையில் கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினரான அவரை கைது செய்வதாகச் சபாநாயகருக்குக் கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை.
அவரது கைதுக்கு வன்மையாகக் கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.
தமிழ் பேசும் சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளிற்கெதிராக வீதியில் இறங்கியே நாம் போராட வேண்டியுள்ளது.
எனவே எமது தலைவரை விடுவிக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்காகவே இந்த கைது,
தமிழ் பேசும் சமூகத்தின் தலைமைகளை விடுதலைசெய், உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய், அரசே
பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும்
எழுப்பியிருந்தனர்.