கிழக்கு மாகாணத்தில் டெல்டா வைரஸ் எவருக்கும் பரவவில்லை - மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் டெல்டா வைரஸ் எவருக்கும் பரவவில்லை எனக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
எனினும் கோவிட் -19 வைரஸ்களை தடுப்பதற்கான நடைமுறைகளை மக்கள் பேண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்று (07) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 24 மணி நேரத்திற்குள் கிழக்கு மாகாணத்திற்குள் 52 புதிய கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 4 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதில் மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பகுதிகளிலேயே குறித்த மரணப் பதிவுகள் தலா இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலையில் அன்டிஜன் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்படுவது குறைவாகவுள்ளது.
எனவே தான் மக்கள் கவனயீனமாக இருந்து விடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் .இரண்டாவது கோவிட் தடுப்பூசி மருந்துகள் ஏற்றும் பணி இன்று (08)முதல் இடம் பெறவுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் இதனைப் பெறவேண்டும். இது வரைக்கும் தடுப்பு மருந்துகளைப் பெற்றவர்களில் எவருக்கும் பக்கவிளைவுகள் எதுவும் இடம்பெறவில்லை.
பயமில்லாமல் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும். எதிர்வரும் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் முன்னிலை உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் எனத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம் பெறவுள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இதில் திருகோணமலை மாவட்டத்திற்கு 25000 டோர்ஸ் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று தொடக்கம் ஏற்கனவே முதலாவது கட்டத்தில் தடுப்பூசியினை பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்திற்குத் தடுப்பூசியினை பெற முடியும் என இதன்போது சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.