கொழும்பில் பரபரப்பு ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு, மஹரகமவிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றின் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தற்கொலை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடன கலைஞரான இவன்திக்கா குமாரி ஹேரத் என்ற பெண் தற்கொலை செய்தமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதென மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்ற பரிசோதனை மேற்கொண்ட விசேட சட்ட வைத்தியர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் மற்றுமொரு நபருடன் இந்த வீட்டு தொகுதியில் உள்ள 16ஆவது அறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி இரவு 11 மணியளவில் வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பும் போது குறித்த பெண் அறையின் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
எனினும் இந்த தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



