மட்டக்களப்பில் நபரொருவர் சடலமாக மீட்பு - நண்பர் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நேசராசா (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரும், அவருடைய நண்பரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்திலுள்ள வாடியில் வைத்து மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர், மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் உயிரிழந்த நபரை தாக்கிய நிலையில் தான் அங்கிருந்து தப்பியோடி காட்டில் ஒளிந்திருந்ததையடுத்து இன்று காலை அங்கிருந்து வெளியேறியதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டாருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவினர் மற்றும் மேப்பநாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.