மொந்தா புயலால் பாதிப்பு இல்லை! வடக்கு, கிழக்கில் மழை தொடரும்
மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை 27ஆம் திகதி புயலாக மாற்றம் பெறும்.
இது வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து மறுதினம் 28 ஆம் திகதி இரவு அல்லது 29 ஆம் திகதி காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொந்தா புயல்
இதற்கு ‘மொந்தா’ எனப் பெயரிடப்படும். இந்தப் பெயரைத் தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது.
2025/2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக இது அமையும். இந்தப் புயலினால் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் எந்தவொரு பாதிப்பும் கிடையாது.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனினும், கிழக்கு கரையோரப் பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நெருக்கடி நிலை
இடி மின்னல் நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெறும். அதேவேளை நாளை 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தப் புயலால் அடுத்த சில நாட்களில் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நெருக்கடி நிலை உருவாகும்.
அதாவது எங்கள் பகுதி வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக்கொள்ளும் என்பதனால் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது.
ஆனாலும், பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025