யாழில் இந்திய அரசின் நிதியுதவியுடன் திறக்கவுள்ள பண்பாட்டு மையம்
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மிகவும் எளிமையான முறையில் இந்த திறப்பு விழா செய்யப்படவுள்ளதுடன் காணொளி முறையில் திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றையதினம் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் இந்த தகவலை வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாத நிலையில் அதனை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தற்போது திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்று இரவு யாழ்ப்பாண பண்பாட்டு மைய திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழிற்கான இந்திய துணைத்தூதர், யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆனாலும் இதுவரை திறப்பு விழாவிற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும்
சம்பந்தப்பட்ட தரப்புகளால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.