வீதியில் தேங்கியுள்ள வெள்ள நீரில் குளித்து வரும் காகங்கள்: மக்கள் சிரமம் (Photos)
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி ஒன்றில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாக அங்கு அதிகமான காகங்கள் குளித்து வருவதால் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள யாட் வீதியிலேயே இவ்வாறு வெள்ள நீர் தேங்கியுள்ளன.
இந்த வீதியினூடாக அரச, தனியார் உத்தியோகஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் அன்றாடம் தமது போக்குவரத்து பாதையாகப் பாவித்து வருகின்றனர்.
வாகனங்கள் பழுது
இவ்வாறு வெள்ள நீர் தொடர்ச்சியாகத் தேங்கி வழிந்தோடாமல் காணப்படுவதனால் மாற்றுப் பாதையை நாடுவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், வெள்ள நீர் தேங்கி இருப்பதன் காரணமாகக் குறித்த வீதியில் அதிகமான காகங்கள் குளிக்கின்ற இடமாக இப்பாதை மாறி வருகின்றது.
இது தவிர, வெள்ள நீர் தேங்கியுள்ள வீதியினால் பயணம் செய்கின்ற வாகனங்கள் திடீரென பழுதடைந்து தரித்து நிற்பதையும் காண முடிகின்றது.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










