அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த (1) ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை துவங்கி வைத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
அதன் பின்னர் திடீரென மாலை 5:00 மணிக்கு ஊர்க்காவற்துறையில் இருந்து கடற்படையினரின் நான்கு ரோந்து படகுகளுடன் கச்சதீவுக்கு சென்றார்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தார்.
கச்சதீவு பயணம்
இலங்கையின் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ அல்லது பிரதமரோ கச்சதீவுக்கு செல்லவில்லை. ஆனால் ஜனாதிபதி சென்றிருப்பது என்பது அரசியல் ரீதியில் முக்கியம் வாய்ந்தது. அதுவே இப்போது பெரும் பேசுபொருளாகிவிட்டது. இந்தப் பயணத்தில் உள்ள அரசியல் உள்நோக்குகள் பற்றியே இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
கடந்த வாரம் தமிழ்நாட்டில் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் கட்சி மகாநாட்டில் உரையாற்றும் போது தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு ""கச்சதீவை மீட்போம்"" என்று பேசினார். அந்தப் பேச்சு சிங்கள தேசத்தில் பெரும் பேசுபொருளாகியது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பௌத்த பிக்குகள் பரவலான கண்டனங்களை வெளியிட்டு ஆக்ரோஷமாக பேசினர். இத்தகைய சிங்கள தேசத்தின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில்தான் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்டார்.
நடிகர் விஜயின் பேச்சுக்கு சிங்கள தேசத்தின் தோழர்களும், பிக்குகளும் எதிர்வினை ஆற்றுகிறபோது தமிழ் தரப்பில் உள்ள தோழர்கள் ஒரு நடிகனின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. அதைக் கடந்து செல்ல வேண்டும் என்கின்றனர்.
ஆனால் ஜேவிபி அணியினர் ஆயுதப் போராட்ட காலத்தில் சிங்களத்தின் பிரபல நடிகரான விஜயகுமாரனதுங்கவை ஏன் படுகொலை செய்தார்கள்? அதற்கான அரசியல் காரணம் என்ன? என்ற கேள்விக்கு இந்த தமிழ்த் தோழர் குஞ்சுகள் பதில் சொல்வார்களா? தெற்காசிய சமூகத்தில் சினிமா பிரபலங்களின் கருத்துக்கள் பட்டி தொட்டி எங்கும், மூலை முடுக்கெங்கும் கருத்து காவிச் செல்லப்பட்ட விடும். கருத்து பரவல் அடைவதை தடுக்கவே விஜயகுமார ரணதுங்காவை ஜேவிபியினர் படுகொலை செய்தனர்.
அவ்வாறுதான் தமிழகத்தின் பிரபல நடிகரின் கருத்து உலகளவிய தமிழர்கள் அனைவரிடமும் சென்றடைந்து விட்டது. அதுதான் சிங்கள தேசத்தில் இந்தக் கொந்தளிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அனுரா கச்சதீவுக்கு செல்வதற்கு முன் யாழ்ப்பாணத்தில் உரையாற்றுகையில் ""எங்கள் நாட்டின் தரை எல்லையை பாதுகாப்போம், கடல் எல்லையை பாதுகாப்போம், வான் எல்லையை பாதுகாப்போம், மூன்றையும் பாதுகாத்து எமது அடுத்த சந்ததிக்கு வழங்குவோம்"" என்று பேசினார்.
அந்தப் பேச்சில் தரை, கடல், வான் என தனித்தனியாக அழுத்தம் திருத்தமாக உச்சரித்து பாதுகாப்போம் என்று கூறியதோடு "எமது இறைமையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்றும் எங்கள் இறையாண்மையில் யாரும் தலையிட முடியாது எனப் பொருள்பட தொடர்ந்து பேசி இருந்தார். தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் நின்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் சிங்கள தேசத்தின் இறைமையை வலியுறுத்தி சிங்களதேசத்தின் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனமாகவும் எச்சரிக்கையாகவுமே அவருடைய உரை அமைந்திருந்தது.
இவ்வாறு எச்சரித்துவிட்டுத்தான் அவர் கச்சதீவுக்கு சென்றார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டின் நடிகர் விஜய் "கச்சதீவை மீட்போம்" என்ற கோஷத்திற்கு பதிலடியாகவும், அதேநேரம் கச்சதீவுக்கு சென்றமை நடிகர் விஜய்யின் கோஷத்துக்கு எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு ஒரு நடிகரின் கருத்துக்கு இலங்கை ஜனாதிபதி பதிலளிப்பதும் வினையாற்றுவதும் என்பது இதுவே முதல் தடவை.
மகாவம்ச மனநிலை
இதிலிருந்து நாம் ஒன்றை அவதானிக்க முடிகிறது. சிங்கள வரலாற்று நூலான மகாவம்ச மனநிலையிலிருந்து அநுரவும் மாறுபட்டவர் அல்ல என்பதை புலப்படுத்துகிறது. கிபி 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகா வம்சம் (37 அத்தியாயங்கள்) தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்பிலிருந்து பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தென்னிந்தியர்களை எதிர்க்கும் நோக்கத்தையும் தென்னிந்திய படையெடுப்புகள் இருந்து இலங்கைத் தீவை பாதுகாக்கும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு தென்னிந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றின் அடித்தளத்தில்தான் மகாவம்சம் நூல் எழுதப்பட்டது.
பௌத்த சிங்கள மக்களை ஒரு கூட கீழ் கொண்டு வந்து இலங்கை தீவை பாதுகாப்பதற்கான மூலோபாயத்தையே அது கொண்டிருந்தது. கடந்த காலத்தில் பலர் தமிழகத்தில் கச்சதீவை மீட்பதற்கான போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். கதவடைப்புகளை நடத்தி இருக்கிறார்கள். ஊர்வலங்களை நடத்தி இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் பெரும் விவாதங்களை நடத்தி இருக்கிறார்கள்.
அதற்கெதிராக எந்தவிதமான கருத்தையும் சிங்கள தேசத்திலிருந்து வெளிவரவில்லை ஆனால் இப்போது இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு தென்னிந்திய கருத்துக்கு சிங்கள தேசத்தில் முக்கியத்துவம் கொடுப்பது என்பது கடந்த மன்னர் கால வரலாற்றையே ஞாபகப்படுத்துகிறது. அந்த வரலாற்று அச்சத்தை இப்போது சிங்கள தேசத்தில் கச்சதீவு மீட்பு என்ற நடிகர் விஜய்யின் கோஷத்துடன் சிங்கள தேசத்தில் கொந்தளிப்புகளும் பௌத்த துறவிகளின் ஆர்ப்பரிப்புகளும் இடம் பெறுவதை அவதானிக்க முடிகிறது.
பாக்கு நீரினை என்பது ஒரு மீன்பிடிக் கடல் என்று தான் சாதாரணமானவர்களின் கண்களுக்கு தெரியும். ஆனால் அது தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் கடல், தமிழர்கள் ரத்தம் சிந்திய கடல், தமிழ்த் தேசிய இனங்கள் இரண்டை இணைக்கும் தொடுபாலம், தமிழ் தேசிய இனத்தின் கடலாதிக்க கொள்கை பிறப்பெடுத்த தாய்மடி, கடந்த 3000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய இனத்திற்கே சொந்தமான கடல், இன்றுவரை தமிழர்களின் கையில் இருக்கும்.
அவர்களுக்கே உரித்தான ஒரே கடல், இந்தக் கடலை யாருக்கும் நாம் விட்டுக் கொடுக்க முடியாது. இந்தக் கடல் இல்லையேல் தமிழினம் இந்தப் பூமிப் பந்தில் நிலைத்து வாழமுடியாது. இந்தக் கடலே தமிழினத்தை பாதுகாக்கும் கடலாக அன்றும், இன்றும், என்றும் இருக்கும். பார்க்குநீரினை அரசியலே தமிழ்த்தேசிய இனத்தை காக்க வல்லது என்ற அடிப்படை உண்மையிலிருந்து அந்தக் கடலின் ஏகோபோக உரிமையை அதன் வளங்களை தமிழர்கள் இழக்க முடியாதது.
இழப்பின் தமிழ்த்தேசிய இனம் அழிக்கப்பட்டு விடும். சிங்கள தேசத்தை பொறுத்த அளவில் பாக்கு நீரினை என்பது அவர்களுக்கு ஒரு சிங்கள பௌத்த அரசை கொடுத்த கடல். பௌத்த மதம் இலங்கையில் பாதுகாக்கப்படுவதற்கு உறுதுணையாக, தடுப்புச் சுவராக, தடுப்பு அகழியாக நின்று சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் பாதுகாத்த கடல். ஒரு வகையில் அது அவர்களுக்கு வரம்.மறுபுறத்தில் அது அவர்களுக்கு சாபமாகவும், நஞ்சாகவும் தோன்றுகிறது.
காரணம் இந்த பாக்கு நிரீணையின் இருமருங்கிலும் தமிழ்த் தேசிய இனம் வாழ்வது மட்டுமல்ல அந்தக் கடல் இன்றுவரை அவர்கள் கையில் இருப்பதுதான். இப்போது பாக்க நீரிணையில் கடற்றொழிலில் ஏற்பட்டிருக்கும் தமிழ் தேசிய இனங்களுக்கு இடையிலான பங்காளி சண்டையில் சிங்கள தேசம் புகுந்து தூங்கமிட்டு கொம்பு சீவி வளர்க்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இப்போது கச்சதீவுக்கு ஜனாதிபதி சென்று ஈழத்தமிழ் மீனவர்களின் குறைகளைக் கேட்டு வருத்தப்பட்டு தமிழ் ஆடுகள் நனைவதைக் கண்டு சிங்கள ஓநாய் அழுகின்ற காட்சி அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.
கச்சதீவு பயணத்துக்கு முன்னர் மயிலிட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் கைப்பற்ற படகுகள் அழிப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அவர் இலங்கையின் இறையாண்மை பற்றி உறுதியாக கூறிய கூற்றும் சிங்கள தேசத்தில் தன்னை ஒருதுட்டகாமினியாக, ஒரு தாதுசேனனாக காட்ட முற்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
தமிழ்த் தேசிய இனம்
அநுரவின் கச்சதீவு பயணம் தென்னிலங்கையில் அனுராவுக்கு குறைந்து வந்த மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை. கச்சதீவுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு தமிழ் கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அறிந்தார், அதற்குத் தான் தீர்வு கண்டு விடுவேன் என்று உறுதியும் அளித்திருக்கிறார்.
இந்தச் செயற்பாடானது ஆழமான அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டது. பாக்கு நீரீணையின் இரு பக்கத்திலும் உள்ள இரண்டு தமிழ் தேசிய இனங்களையும் மோத விடுவதற்கான மூலோபாயத்தை கொண்டதாகவே பார்க்கப்பட வேண்டும். தமிழ்த் தேசிய இனம் பாக்கு நீரினையினால் இரண்டு பகுதிகளாக பிரிந்து இரண்டு பல்தேசிய அரசுகளுக்குள் அகப்பட்டு உள்ளன. தத்துவார்த்த ரீதியில் இந்த இரண்டு தேசிய இனங்களில் ஏதேனும் ஒன்று விடுதலை பெற இரண்டு பல்தேசிய அரசுகளும் ஒருபோதும் அனுமதிக்காது.அதற்கு எதிராகவே அவை செயல்படும் என்பதே எதார்த்தமாகும்.
இந்த அடிப்படையில்தான் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இருகரம் நீட்டி ஜே.ஆர் ஜெயவர்த்தன வரவேற்றார். அந்த ஒப்பந்தத்தில் இலங்கை ஜனாதிபதியும், இந்திய பிரதமரும் கையெழுத்திட்ட பின்னர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து அதனை முறித்து அதன் மூலம் ஈழத் தமிழர் சார்பாக கையெழுத்திட்ட இந்தியாவையும் ஈழத் தமிழர்களையும் மோத விட்டு அவர்களை நிரந்தர பகையாளியாக்கிவிட்டார்.
அந்த வரிசையில் இப்போது அநுர கச்சதீவுக்கு சென்று தமிழ் கடற்றொழிலாளர்களுடன் உரையாடி அவருடைய பிரச்சனையை தீர்ப்பதாகவும் அத்துமீறிய எல்லை மீறும் தமிழக கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துவதாகவும் உறுதியளித்ததிலிருந்து பாக்கு நிரீணையின் இரண்டு கரைகளிலும் உள்ள தமிழ்த்தேசிய இனத்தை மோத விடுவதன் மூலம் அவர்களை பகையாக்கிவிட முனைகிறார்.
ஈழத் தமிழர்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரே ஒரு ஆதரவு தளமான தமிழகத்தையும் ஈழத் தமிழரை இழக்கச் செய்து விடவேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையிலேயே ஈழத் தமிழ் மீனவர்களை அரவணைப்பது போல பாசாங்கு செய்கிறார். கச்சதீவுக்குச் சென்றவர் ஏன் செம்மணிப் புதைகுழி அகழ்வு ஆய்வை பார்வையிடவில்லை? என்பதற்கு அவருடைய பதில் தான் என்ன? இங்கே சிங்கள அரசியல் ராஜதந்திரத்தின் அனைத்து கெடுக்கும் தந்திரத்தை தமிழ் தரப்பு சரிவர இப்போதே புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் தமிழகத்து அரசியல்வாதிகளின் அல்லது அரசியலில் செல்வாக்கு செலுத்துவ முற்படுபவர்களின் கச்சதீவை மீட்போம் என்ற கோஷம் சரி பிழைகளுக்கப்பால் கச்சதீவு என்பது இப்போது தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி. யாழ் மாவட்ட கிராம சேவையாளர் பிரிவுகள் இலக்க ஒழுங்கில் முதலாம் இலக்கத்தில் கச்சதீவு உள்ளடங்குகிறது.
இங்கே கச்சதீவை மீட்போம் என்பது யாரிடமிருந்து மீட்கப் போகிறார்கள்? என்ற கேள்வி ஈழத் தமிழர்களிடம் எழுகின்றது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையால் படுகொலை செய்யப்பட்டு அழிவின் விளிம்பில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள் இலங்கை தீவில் அரசியலில் கோவனத்துடன் நிற்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களின் தாயகத்தின் ஒரு பகுதியாக தற்போது இருக்கின்ற கச்சதீவை தமிழகத் தமிழர்கள் மீட்க போகிறோம் என்று சொல்வது ஈழத்தமிழர்களின் கோவணத்தை உருவிக் கொண்டு செல்லும் செயலாகவே பார்க்க வேண்டும்.
பாக்கு நீரிணையில் இரு மருங்கிலும் உள்ள தமிழ் கடல் வேட்டைச் சமூகத்தை ஒரு மேசையிலிருத்தி பேசுவதன் மூலம் கடல் தாண்டிய கடற்றொழில் பிரச்சினைகளையும், தகராறுகளையும் இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். மாறாக இரண்டு அரசுகள் சார்பிலும் இந்த பிரச்சினையை அனுகினால் இரண்டு தேசிய இனங்களையும் மோத விடுவதற்கான கொம்பு சீவுகின்ற நாசக்கார வேலைகளையே இரண்டு அரசுகளும், அதன் அதிகாரிகளும் செய்வார்கள். இது தமிழினம் தலைநிமிர முடியாத ஆதாள பாதாளத்தை நோக்கி தள்ளவே வழிவகுக்கும்.
பாக்கு நீரிணை
ஜனாதியதி யாழ்ப்பாணத்தில் ""எங்கள் நாட்டின் தரை எல்லையை, கடல் எல்லையை, வான் எல்லையை பாதுகாப்போம் இலங்கையின் இறையாண்மையை யாருக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக கூறிய கூற்றும் பாக்கு நீரிணையை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது. இந்தப் பாக்கு நீர் என என்பது சிங்கள மக்களுக்கு ஒரு அரசை கொடுத்திருக்கிறது சிங்கள மக்களிடம் பௌத்தத்தை பாதுகாத்து இருக்கிறது.
இன்றுவரை பௌத்த மதம் இலங்கையில் நிலை பெற்றிருப்பது இந்தப் பாக்கு நீரிணையால் தான். பாக்கு நீரிணை தான் சிங்கள பௌத்தர்களின் பரப்பிரசாதமாகும். அதுவே அவர்களின் பாதுகாப்புக்கான தடுப்புச் சுவரும் அகழியுமாகும். ஆகவே அந்தப் பாக்கு நீரிணையை பாதுகாப்பதுதான் மூலமே பௌத்த சிங்கள அரசு நிலைக்க முடியும். அதுவேதான் அவர் கடல்,வான், தரை எல்லைகளையும் பாதுகாப்போம் என்பதன் பொருளாகும்.
மேற்படி ஜனாதிபதியின் பேச்சிலிருந்த இறைமையும், அதன் எல்லைகள் பற்றிய ஆழமான அறிவு விடுதலைக்காக போராடுகின்ற தமிழ் தேசிய இனத்திற்கு அவசியமானது. இறைமை என்பது ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குள் வாழ்கின்ற மக்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் அரசு என்கின்ற நிறுவனம் செலுத்துகின்ற மட்டற்ற அதிகாரம் எனப் பொருள்படும். அரசு என்கின்ற நிறுவனம் அரசாங்கத்தின் மூலம் விதிக்கின்ற சட்டங்களை மீறுவோரையும், கட்டுப்படாதவர்களையும் அடக்கி, ஒடுக்கி கட்டுப்பட வைக்கின்ற அதிகாரத்தையே குறித்து நிற்கிறது.
அந்த அதிகாரம் அந்த நாட்டின் எவ்வகைய எல்லைக்குள் செல்லுபடியாகும் என்றால் அது அதனுடைய தரை கடல் வான் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியிலேயே செல்லுபடியாகும். இங்கே தரையே எல்லை என்பது இலங்கைத் தீவையும் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் உள்ள தீவுகளையும் உள்ளடக்கிய 65 ஆயிரத்து 610 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகும்.
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது பருமனிலும் பலத்திலும் தங்கி இருந்த காலம் மாறி நவீன யுகத்தில் கடல் எல்லைகளை வகுக்க வேண்டிய சூழல் தோன்றிய போது ஐநா சபையால்1982ல் சர்வதேச கடல் எல்லை சட்டங்கள் (Maritime Boundary Laws) வரையப்பட்டன. இதனை United Nations Convention on the Law of the Sea (UNCLOS, 1982) என்ற (கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCLOS, 1982)) உடன்படிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை “கடல்களின் அரசியலமைப்புச் சட்டம்” (Constitution for the Oceans) என அழைக்கின்றனர். இந்த சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடல் எல்லை சட்டத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் கடல் எல்லை (Maritime Boundary) கீழ்கண்டவாறுதான் வரையறுக்கப்படுகிறது. முதலாவதாக அடிப்படை கோடு (Baseline) அதாவது ஒரு நாட்டின் கடற்கரை. அதிலிருந்து 12 கடல் மைல்(Nautical Miles) அதாவது 22.2 கி.மீ வரையான பகுதி இது முழுமையாக அந்த நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுவாதீன ஆட்சி உட்பட்ட பகுதியா ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதனை பிரதேசக் கடல் (Territorial Sea) என அழைக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட கடலற் துாரம் குறுகியதாக இருப்பின் இரு நாடுகளுக்கும் கடல் எல்லை சமமாக பங்கிடப்படும். அவ்வாறே நாட்டின் கடற்கரை இல் இருந்து 12 கடல் மைல் தூரத்துக்கு அப்பால் 24 கடல் மைல் (44.4 கி.மீ) வரையான கடற் பகுதியை தொடர்புக் கடற் பகுதி (Contiguous Zone) என்ன வரையறை செய்யப்படுகிறது.
இந்தக் கடற் பகுதிக்குள் குறிப்பிட்ட அந்த நாட்டின் சுங்கம், குடியேற்றம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அதிகார கட்டுப்பாடு செலுத்த முடியும். அவ்வாறே குறிப்பிட்ட நாட்டின் கடற்கரையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் 200 கடல் மைல் (370.4 கி.மீ) வரையான கடற் பகுதி அந்த நாட்டுக்குரிய பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone) என்ன வரையறுக்கப்படுகிறது இதனை EEZ என பொதுவாக அழைக்கப்படுகிறது.
சர்வதேச விதிமுறைகள்
இந்த கடல்வளையத்துக்குள் அந்த நாட்டிற்கு எண்ணெய், இயற்கை எரிவாயு, மீன்பிடி, கடல் வளங்கள் பயன்படுத்தும் தனி உரிமை உண்டு. ஆனால் இந்த வலையத்துக்குள் சர்வதேச கடல் போக்குவரத்து விமானப் போக்குவரத்து போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாட்டின் எல்லையில் இருந்து சமுத்திர பரப்பில் 200 கடல் மையில்களுக்கு அப்பால் புவியியல் அடிப்படையில் கடல் அடித்தளம் மேடைகள் நீள்ச்சி பெற்றிருந்தால் குறிப்பிட்ட நாடு அதிகபட்சம் 350 கடல் மைல் வரை வளங்களைப் பயன்படுத்தும் உரிமை பெற முடியும்.
இதனை கண்ட மேடை உரிமை (Continental Shelf) என வரையறை செய்யப்படுகிறது. இவைதான் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட (UNCLOS, 1982) அடிப்படையில் உலக நாடுகள் பின்பற்றும் சர்வதேச விதிமுறைகள் ஆகும். அவ்வாறே ஒரு நாட்டின் வான் எல்லை கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்கள்) உயரம் வரை உள்ளது என்று சர்வதேச வான்வழிச் சங்கம் (FAI) நிர்ணயித்துள்ளது.
அந்த வான் எல்லையை கார்மன் கோடு(Kármán Line) என்று அழைப்பர். பூமியிலிருந்து மேலே100 கி.மீ உயரத்திற்கு மேல் சென்றால், அது விண்வெளி என்று கருதப்படுகிறது. ஆகவே வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான தூரம் 100 கிலோ மீட்டர்கள் என்பதனால் அதனையே சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைக் கோடாக உள்ளது.
இந்த எல்லைக் கோட்டினை தியோடர் வான் கார்மன் (Theodore von Kármán) என்ற ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த யூத வானூர்தி விஞ்ஞானி வரையறை செய்ததனால் அவரின் பெயரிலேயே Kármán Line என வான் எல்லை அழைக்கப்படுகிறது. மேற்படி சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கடல்களின் அரசியலமைப்புச் சட்டத்தை கச்சதீவு விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதி நேரடியாக கையாள்வதற்கான முதற்படியாகத்தான் யாழ்ப்பாணத்தில் அவர் பேசிய கடல் வான் தரை எல்லை பாதுகாப்பு என்ற பேச்சு அமைகிறது.
இதன் மூலம் அவர் பாக்குநீரினையின் எல்லையை மிக இறுக்கமாக பாதுகாப்பதற்கும், யாழ்ப்பாணத்தின் வடக்கிலும் வடகிழக்கிலும் விரிந்து கிடக்கின்ற பேதுரு கடல் அடித்தள மேடையில் உரிமம் கொண்டாடவும், அதே நேரத்தில் இலங்கை அரசு சார்ந்து இலங்கை அரசால் நியமிக்க கூடியவர்கள் அந்தப் பகுதியில் மீன்பிடி மற்றும் ஆய்வுகளில் கடல் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசுக்கு உரித்தான உரிமத்தை நிலை நாட்டுவதற்கான கொள்கைப் பிரகடனமாகவும் இதனைப் பார்க்க வேண்டும்.
கச்சதீவு விவகாரம்
இப்போது தமிழர்கள் எடுக்க வேண்டிய பாக்குநீரிணை அரசியலை அநுர தன் கையில் எடுத்து சிங்கள தேசத்தின் அரசியலாக மாற்ற முற்படுகிறார். தமிழர் தாயகத்தின் கடற்பரப்பில் இலங்கை அரசு உரிமம் கொண்டாடுவது என்பது அது நமக்கான உரிமைதான். ஆயினும் இங்கே மறைந்திருக்கின்ற இன்னுமொரு உள்பொருள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கும், ஆய்வுகளில் ஈடுபடுவதற்கும் சீனாவிற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதான் இங்குள்ள முக்கிய விடயம்.
ஆகவே ஜனாதிபதியின் இந்த உரிமம் குரலுக்கு ஊடாக சீன நிறுவனங்கள் தமிழர் தாயக கடத்தரப்பில் கடத்தொழில் ஈடுபடுவதற்கான அனைத்து வழிகளும் இப்போது திறக்கப்பட்டு விட்டன. பெரும் நிறுவனங்களின் மீன்பிடி தொழிலுக்கு முன்னே ஈழத் தமிழ் ஏழை மீன்பிடி தொழிலாளர்கள் எம்மாத்திரம்? தமிழ் கடற்றொழிலாளர்களை பெருநிறுவனங்களின் கூலியாளராக மாற்றுவதற்கான சதிகார வேலைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
இப்போது எழுந்திருக்கின்ற கச்சதீவு விவகாரமும் அதனால் ஏற்பட்ட பதிலடிகளும், வினையாற்றல்களும் ஈழத் தமிழர்களின் அரசியலில் மிகப் பாதகமான எதிர் விளைவுகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்க வல்லது. இந்த இடத்தில் தமிழர்களும், தமிழ்த் தலைமைகளும் தமிழர் தாயகத்தையும், தமிழ் தேசியத்தையும், தமிழர் பொருளாதாரம் வாழ்வையும் பாதுகாப்பதற்கான மூலபாயங்களை சரியாக வகுக்கவேண்டும்.
சரியான திட்டமிடலுடன் செயற்பட்டால் மாத்திரமே இந்து சமுத்திர அரசியலில் தமிழ் மக்கள் தமக்கான பங்கையும், பாத்திரத்தையும் வகிக்க முடியும். இல்லையேல் நாம் படிப்படியாக கரைக்கப்பட்டு இல்லாது ஒழிக்கப்பட்டு விடுவோம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 07 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




