யாழ். வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
வேலணையை அச்சுறுத்தி வந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பலுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் கூறுகையில், வேலணை புங்குடுதீவு அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக பொலிசாரால் தேடப்பட்டுவந்த நிலையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில் இருவர் நேற்றுமுன்தினம் (13) கைது செய்யப்பட்டனர்.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில் குறித்த திருட்டுக்களின் பிரதான சூத்திரதாரியான கஜவதன் என்பவர் வேலணை வங்களாவடியில் வைத்துக் இன்று கைது செய்யப்பட்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக மொத்தமாக ஏழு நபர்கள் கைதாகியுள்ளனர்.

திருட்டை இல்லாதொழிக்கும் இறுக்கமான நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டநிலையில் இவர்கள் கைதாகியுள்ளனர்.இதனால் வேலணையில் மாட்டு திருட்டு உள்ளிட்ட திருட்டுக்கள் குறையும் என நம்புகின்றோம்.
இதேநேரம் இவ்வாறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது மிக கடுமையான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களது தகவலை பொலிசாருக்கு வழங்குமாறும் கேட்டுள்ளார்.