சாகர காரியவசம் குற்றச்சாட்டிற்கு பதிலடிக் கொடுத்த அரச தரப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தலுக்கான பிரதான காரணம் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் மோசடி விசாரணை
நீண்டகாலமாக ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகளில் சிக்கியிருந்த இந்த நாட்டில், பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மூடிமறைக்கப்பட்ட வழக்குகளும் விசாரணைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கான முனைப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விசாரணைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
“நடு வீதியில் வைத்து கொல்ல வேண்டும்" என்ற கொடூரமான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவது நீதிக்கும், சட்டவாட்சிக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என அமைச்சர் சாடியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மக்களின் சொத்துக்களை அபகரித்த நபர்களே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
படுகொலை சம்பவங்களுடன் தொடர்புட்ட அரசியல்வாதிகள்
சாகர காரியவசம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் சில அரசியல்வாதிகள், உண்மையில் நாட்டின் பாரிய படுகொலைச் சம்பவங்கள் மற்றும் பாரிய கொள்ளைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது அவற்றைக் குழப்பவோ எந்தவொரு அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.