தீவகப்பகுதிகளில் மர்ம நபர்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள மாடுகள் (Photos)
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரவணை மற்றும் வேலணைப் பகுதியில் நான்கு மாடுகள் களவாடப்பட்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.
சரவணை பகுதியில் ஒரு மாடும், வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இன்று அதிகாலை (6) இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன.
கால்நடைகள் மேய்ச்சல் தரவையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்துச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இறைச்சிக்காக வெட்டிவிட்டு கழிவுகளை பற்றைக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களால் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




